போலியோ தினம் எனப்படும் உலக இளம்பிள்ளை வாத நாள்!

போலியோ தினம் எனப்படும் உலக இளம்பிள்ளை வாத நாள்!

ளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் ( Polio virus )என்று அழைக்கிறோம். இன்று போலியோ பெருமளவு கட்டுபாட்டுக்குள் வந்துவிட்டது. இதற்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் மருத்துவர் ஜோனஸ் சால்க். அவரது நினைவாக உலக இளம்பிள்ளை வாத தினம் இதே அக்டோபர் 24-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்த போலியோ வைரஸ் ரகம் 1 ,2 , 3 என்று மூன்று ரகங்கள் உள்ளன இந்த வைரஸ் வகைகள் குறிப்பாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை மிக்கவை. முதுகுத் தண்டு நரம்புகளையும் ( spinal cord ) தலை நரம்புகளையும் அதிகமாக தாக்குகின்றன. இதனால் தசைகளை இயங்கச் செய்யும் செயல் நரம்புகள் ( motor neurones ) செயல் இழந்து போகின்றன. குறிப்பாக கை கால்கள் பாதிக்கப்பட்டால் அவை சூம்பிப்போகின்றன. அதனால் அவர்களால் நடக்க முடியாமல் போய் விடுகிறது.

உலகம் முழுதும் போலியோ வியாதி காணப்பட்டாலும், அது தோன்றும் அளவு ( incidence ) தற்போது குறைந்துள்ளது இதற்குக் காரணம் மக்களிடையே உண்டான சுகாதார விழிப்புணர்வு, முறையான கழிவறைகள், பரவலான தடுப்பு மருந்துகள் பயன்படுத்துவது போன்றவை எனலாம். இந்த இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது.

இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.

2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 13 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வந்தது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கியது.

இளம்பிள்ளை வாத நோயின் அறிகுறிகள்:

வைரஸ் தொற்று உண்டான பின் நோயின் அறிகுறி தோன்ற 7 முதல் 14 நாட்கள் ஆகும் . இதை உறங்கும் காலம் ( incubation period ) என்பர். அதன் பின்பு வைரஸ் தன்மைக்கு ஏற்ப அறிகூறிகள் மாறும்.

* வெளியில் தோன்றாத தொற்று வகை – inapparent infection

வைரஸ் தொற்று உண்டான 95 சத விகிதத்தினருக்கு இந்த வகை இருக்கும். இதில் அறிகுறிகள் ஏதும் இருக்காது.

* வெளியில் தோன்றும் தொற்று வகை ( abortive poliomyelitis)

இந்த வகை 4 முதல் 5 சத விகிதத்தினருக்கு உண்டாகலாம். இதில் காய்ச்சல், தொண்டை வலி, தசைகள் வலி போன்றவை தோன்றி சில நாட்களில் தானாக குணமாகும்.

* முடக்குவாதம் இல்லாத இளம்பிள்ளை வாதம் ( non – paralytic poliomyelitis )

இதில் வெளியில் தோன்றும் வகைக்கான அறிகுறிகள் தோன்றுவதோடு மூளைச் சவ்வு தொடர்புடைய தொந்தரவுகள் ( meningeal irritation ) உண்டாகும். ஆனால் நோய் தானாக முற்றிலும் குணமாகிவிடும்.

* முடக்குவாத இளம்பிள்ளை வாதம் ( paralytic poliomyelitis )

இந்த வகைதான் ஆபத்தானது . போலியோ வைரஸ் கிருமியால் தாக்கப்படும் பிள்ளைகளில் ௦.1 சத விகிதத்தினர் இந்த கொடிய வகையால் பாதிக்கப்படுகின்றனர்.

வாதம் உண்டாவதை துரிதப்படுத்துபவை வருமாறு:

* ஆண் பிள்ளைகள்

* காயம், அறுவை சிகிச்சை, ஊசி போட்டுக் கொள்ளுதல்

* சமீபத்திய தொண்டை சதை அறுவை சிகிச்சை.

இந்த வகையில் காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி உண்டாகி 4 முதல் 5 நாட்களில் சரியாகும். ஆனால் அதன்பின் நோய் மீண்டும் கடுமையாகத் தோன்றும். மூளை சவ்வு பிரச்னை அதிகமாகும். அதோடு கழுத்து, இடுப்புப் பகுதி தசைகள் கடுமையாக வலிக்கும். இவை ஒருசில நாட்கள் தொடர்ந்தபின் வாதம் உண்டாகும். பாதிக்கப்பட்ட காலில் தசைகள் செயலிழந்து போய்விடும். ஆனால் தொடு உணர்ச்சி குன்றாமல் நிலைத்திருக்கும்.

5 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு கால்கள் மட்டும் வாதத்தால் பாதிக்கப்படுவர். அதைவிட பெரிய பிள்ளைகளுக்கு கைகளில் வாதம் உண்டாகும். பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் இரண்டு கால்களும் ( paraplegia ) அல்லது கால்களுடன் இரண்டு கைகளும்கூட ஒரே நேரத்தில் ( quadriplegia ) செயல் இழக்கலாம்.

* முருள வாதம் ( bulbar paralysis )

இதில் தலை நரம்புகள் ( cranial nerves ) மற்றும் சுவாச தசைகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டு ( respiatory muscle paralysis ) செயல் இழந்து போகலாம். இதுபோல் உதடு, நாக்கு, தொண்டை ஆகிய பகுதிகளிலும் வாதம் உண்டாகும். இந்த பாதிப்பால் இயல்பான காப்பு நரம்பியக்கங்களை நோயாளி இழந்துவிடுகிறார். அதனால் மூச்சடைப்பு, சுவாசச் சீதசன்னி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இளம்பிள்ளை வாத நோய்க்கான சிகிச்சை முறைகள்

நோய் வந்தபின் இதற்கு அதிகமான சிகிச்சைகள் இல்லை.

துவக்கக் காலத்தில் நல்ல ஓய்வு தேவை.

அதிலிருந்து விடுபட்டு வாதம் உண்டானால் உடற்பயிற்சி மருத்துவம் ( physiotherapy ) , தொழில் முறை மருத்துவம் ( occupational therapy ) போன்றவை தரப்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் பலம் சேர்க்கலாம். உடல் ஊனமுற்றிருந்தாலும் மனோதிடத்துடன் தான் கற்ற தொழில் செய்யலாம். கால் நடக்க முடியாதவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு கிடுக்கிமானி ( calipers ) உதவியுடன் நடக்கலாம்.

இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு:

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள தடுப்பு மருந்து பயன்படுத்தியதால் இன்று உலகளாவிய நிலையில் இந் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது நல்ல செய்தி. இந்த சொட்டு மருந்து பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மாதங்களில் வாய் வழியாக தந்தாலே போதுமானது. எப்போதுமே பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரையே பருக வேண்டும் என்பதும் மிக முக்கியமானது.

இந்த பூமியிலிருந்து இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்

error: Content is protected !!