உலக இசை தினமின்று!

உலக இசை தினமின்று!

சை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இதை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம்.

அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப் பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம் இசையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு உணர்த்துவர்.

இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மௌரிக் ஃபிளியூரெட் இருவரும் இசையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ளவே இந்நாளை உருவாக்கினார்கள். அதன்பிறகே பாரிஸில் 1982-ம் ஆண்டு முதல் இசை நாள் கொண்டாடப்பட்டது. அப்படி என்னதான் நன்மைகள் என்று பார்க்கலாமா?.

மனநிலையை உற்சாகமாக்கும்: இசையைக் கேட்பதால், மூளை மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதனால் இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி, ஃபீல் குட் உணர்வு தோன்றுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

மனஅழுத்தம் குறையும்: மென்மையான இசையைக் கேட்கும்போது மனஅழுத்தத்தின்போது சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் எந்த சோகமாக இருந்தாலும் பிடித்த இசையைக் கேட்கும்போது மனது இலகுவாகிறது.

பதட்டம் குறையும்: புற்றுநோயில் இருப்போர் பலருக்கு இசையைக் கேட்க பரிந்துரைத்ததில் அவர்களுக்கு இருக்கும் பதட்டம் குறைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

மனச்சோர்வு குறையும்: உலகில் 350 மில்லியன் மக்கள் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களுக்கு இசையை முதல் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவ்வாறு தூங்கும் முன் இசைக் கேட்டுக்கொண்டே தூங்கினால் கவலைகள் மறந்து ஆழ்ந்து தூங்குவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உடற்பயிற்சிக்கு ஊக்கம் : உடற்பயிற்சியின் போதும், ஜாகிங், நடைப்பயிற்சி இப்படி எதுவாயினும், இசை கேட்டுக் கொண்டே செய்தால் தொய்வில்லாமல் சுருசுருப்படையச் செய்யும்.

ஞாபகத்திறன் அதிகரிக்கும்: நாம் கேட்கும் இசை அல்லது பாடல் வரிகள்களை எப்போது கேட்டாலும் நினைவுக்கு வருகிறது என்றால், நம் ஞாபகத்திறனின் வளர்ச்சியை தூண்டப்படுவதே காரணம். இதனால் நம்முடைய ஞாபகசக்தி அதிகரிக்கும்.

error: Content is protected !!