சர்வதேச ஆண்கள் தினம்!

சர்வதேச ஆண்கள் தினம்!

ண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. அதை சிலர் கேலி வேறு செய்கிறார்கள் – “ஆண்களுக்கென்ன கேடு, தனியாக ஒரு நாள் வேறு ஒன்று தேவையா?” – என்று!

ஏன் அப்படி? அனைத்து சிறப்புக்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்களில் சில:

ஆண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்த செயல்பாடு போன்றவற்றை வேண்டுவது, ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன் மதிரிகளை அடையாளம் காண்பது அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்

வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான் (the role of a protector and provider). அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை. இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன! இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது

முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தும் போக்கையும், பல ஆணெதிர் சட்டங்களின் செயல்பாடுகளால் இந்திய ஆண்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்பு நிலையையும் எதிர்த்துப் போராடுவது

இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள்.

எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதை தவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும் கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கணவர்கள் முறைத்து பார்த்தால்கூட உடனே புகார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த சட்டங்களால் அமைச்சராக இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டார். எம்.பி. ஒருவரும், நீதிபதி ஒருவரும்கூட பாதிக்கப்பட்டதை செய்திகளாக பார்த்துள்ளோம்.

எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் அமைப்பினர் அதிகமாகி வருகிறார்கள்

error: Content is protected !!