சர்வதேச தேங்காய் தினம்!

சர்வதேச தேங்காய் தினம்!

ர்வதேசத் தேங்காய் நாள் ( world coconut day ) ஆண்டுதோறும் செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப் படுகிறது. இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். இந்தியா தேங்காய் உற்பத்தியில் மூன்றாமிடம் வகிக்கிறதால் நம் நாட்டிலும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில்தான் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது. வரலாறு அறிய முடியா பழமை கொண்டது தேங்காய். தெற்கு பசிபிக் பகுதியான நியூ கினியாவில் இருந்து, கடலில் மிதந்து வந்த தேங்காய்களே இந்திய பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்க கடற்கரை பகுதிகளில் தென்னை பரவ காரணம் என்று விஞ்ஞானிகள் யூகித்திருக்கிறார்கள்கள். * தேங்காய்க்கு ‘கோகோநட்’ என்ற பெயரைச் சூட்டியவர் வாஸ்கோடகாமா. உலகம் சுற்றிய அவர் தேங்காய்களை இங்கிலாந்திற்கு அறிமுகம் செய்தார். அவர் அதற்கு ‘கோகோ’ என்று பெயர் வழங்கியிருந்தார். அந்த ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு ‘மூடிய முகம்’ என்று பொருள். அது பருப்பு வகையுடையதாக விளங்கியதால் பிற்காலத்தில் ‘நட்’ என்ற பிற்சேர்க்கையும் இணைந்து கோகோநட் என்று வழங்கப்பட்டது.

‘பூலோக கற்பகத்தரு’ என்று பனை மரம் போற்றப்பட்டாலும், உலகின் நிஜ கற்பகத் தருவாக விளங்குவது தென்னைதான். உலகம் முழுக்க பரவலாக விளைவது மட்டுமல்லாமல் பனைபோலவே அனைத்துப் பாகங்களையும் பயன்பாட்டிற்குத் தந்து உலகை இளைப்பாற செய்கிறது தென்னை. இயற்கை பானமான இளநீர் தொடங்கி, தென்னையின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். “பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு, தென்னையைப் பெற்றால் இளநீரு” என்ற நம் முன்னோர் வாக்கு தென்னையின் பயன்பாட்டு குணத்திற்கு சான்று . தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான்.

தேங்காய்

தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.

இளநீர்

குளிர்ச்சியைத் தரவல்லது; தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர் அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது.

தேங்காய்ப் பூ

தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.

தேங்காய்ப்பால்

பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான். தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது.

தேங்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மாற்றம்?

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நம் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்களைக் காணலாம்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதுடன், சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள் குணமாகும். காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கும்.

உடலின் ஆற்றல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தைராய்டு சுரப்பியை சீராக செயல்படுத்த உதவுகிறது.

உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக நோய்களை குணமாக்குகிறது.

தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது செரிமானம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், அது உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைத்து, பசியை கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.

காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கடுமையான தலைவலி மற்றும் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் உடல் வறட்சி பிரச்சனை தடுக்கப்படுவதுடன், உடலின் நீர்ச்சத்து அதிகமாகும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் தண்ணீர் உதவுகிறது.

தேங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள்

பரீட்சையில் பாஸானால் பிள்ளையாருக்கு உடைக்கப்படும் தேங்காய்கள் அன்றாட சமையலிலும் தவறாமல் இடம்பிடிக்கிறது. இளநீர் மற்றும் தேங்காய்களில் இருக்கும் நன்மைகளை இந்த நாளிலாவர்க்ய் முழுமையாக அறிந்து கொள்ளலாம் .

“உலகின் மிகத் தூய்மையான நீரை நீங்கள் பருகிக்கொண்டு இருக்கிறீர்கள் நண்பர்களே!” என்பார்கள் இளநீர் அருந்துபவர்களிடம். வேர் வழியே உறிஞ்சி உச்சிக்குக் கொண்டுபோய், சொம்புத் தண்ணீரை கொத்துக்கொத்தாய் தேக்கிவைத்திருக்கும் இயற்கையின் அற்புதம் இளநீர்த் தேங்காய்!

மனிதக் கரங்களால் மாசுபடாத நீர் அது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு அவசர கால குளுகோஸ் மருந்தாகச் செலுத்தப்பட்டது, தேங்காய் தண்ணீர்தான்.

இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய். கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பாகத் தரையில் போட்டு உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக ஐதீகம். இந்து மதப் புராணங்களில் தென்னை மரம் ‘கற்பகவிருட்சம்’ எனச் சொல்லப்படுகிறது. கேட்டதைக் கொடுப்பது என்பது இதன் பொருள்.உலகின் பல்வேறு கலாச்சாரங்களாலும் போற்றப்படுவது தேங்காய். இந்தியாவில் புதிதாய் ஒன்றை வாங்கும்போது பூஜிக்கவும்… கோவில்களிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் அர்ப்பணிக்கவும் அனைவரும் பயன்படுத்துவது தேங்காயைத்தான். தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களும் உண்டு. உலகில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கியப் பங்காற்றுகிறது.

தேங்காயின் பலன்கள்:

தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.

தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.

தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.

சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.

முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.

வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.

இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.

வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.

தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கியிருப்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை.

வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!