தாய்ப்பால் மகிமைக்கான விழிப்புணர்வு வாரம்!

தாய்ப்பால் மகிமைக்கான விழிப்புணர்வு வாரம்!

பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப் பால். தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து போன்றவை கிடைப்பதுடன் முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது. தாய்மார்கள் குறைந்த பட்சமாக ஆறு மாதம் வரையிலாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். அதையொட்டி தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும் தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ (ஆகஸ்ட் 1 – 7) கொண்டாடப்படுகிறது.

பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் மேற்படி தாய்பால் வாரம் கொண்டாடி வரும் சூழலில் கூட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஐந்தில் நான்கு தாய்மார்கள், தாய்ப்பால் முழுமையாக தருவதில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல் . ஆய்வின் படி, இந்தியாவில் 40.5% தாய்மார்கள்தான் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தருகிறார்கள். 46.8% தாய்மார்கள் மட்டுமே 6 மாதம் வரை தாய்ப்பால் தருகிறார்கள். மேலும் சிலர் புட்டிப்பாலுக்கு எளிதாக மாறிவிடுகின்றனர். தமிழகத்திலும் இந்த சதவிகிதம் குறைவு என வெளிவரும் புள்ளிவிவரங்களும் கவலையை ஏற்படுத்துகின்றன.

குழந்தைக்கு உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தாய்ப்பால்தான். தாய்க்கும் சேய்க்கும் இடையே ஓர் உன்னதான உறவுப் பாலமாய் பந்தத்தையும் உளவியல் ரீதியாக அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. தாய்ப்பாலில் நிறைந்துள்ள தண்ணீர், வைட்டமின்கள் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் தவிர்க்கப்படுவதோடு ஆஸ்துமா, அலர்ஜி, நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகியவற்றையும் தடுக்கவல்லது.உடற்பருமன், குழந்தைப் பருவப் புற்றுநோய், குழந்தைப் பருவ நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களிலிருந்தும் காக்கிறது. இது எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைக்கும் பலம் தாய்ப்பாலுக்கு உண்டு.

மேலும் தாய்ப்பால் தருவதால் பேறுகாலத்திற்குப் பின் தாய்க்கு ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் ரத்த சோகை குறைவாகக் காணப்படும். மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை சார்ந்த புற்றுநோய் வராமலும் தடுக்கும் பெரும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. மேலும், தாய்ப்பால் தருவதன் மூலம் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதால், தாயின் உடல் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிவிடும். பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்தான். அதற்கு இணையாக எந்த உணவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது உண்மை.

குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் கூட, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஒரு தாய் அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளானால், சுத்தமாக தன்னை வைத்துக்கொண்டு (சுத்தமான இடம், அடிக்கடி கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல்) குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம். மூச்சுத்திணறல் போன்ற எல்லா அறிகுறிகளோடும் ஒரு தாய் கொரோனா தொற்றுக்கு ஆளானால், பிரஸ்ட் பம்ப் (Breast Pump) கொண்டு தாய்ப்பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்ப்பால் மூலம் தொற்று பரவாது என்ற ஆய்வுகள் ஆறுதலை தருகின்றன. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான அடித்தளத்தை அமைப்பதே தாய்ப்பால்தான். எனவே, கொரோனாவில் இருந்து குழந்தையை காக்கும் ஆயுதமும் தாய்ப்பாலிடம் உள்ளது. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, எந்த நிலையிலும் கொரோனா பாதித்த தாயின் தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது என எல்லா ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தாய்ப்பால் சாதகமே தவிர, பாதகமில்லை என்பதை நாம் உணர வேண்டும். பொதுவாகவே குழந்தைகளிடம் எதிர்ப்பு சக்தி உள்ளதால் தாய்ப்பாலுடன் இணைந்து போராடி கொரோனா போன்ற நோய்களில் இருந்து காக்கின்றன.

ஆக., இச்சமூகத்தில் அனைவருக்கும் தாய்ப்பால் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது நம் முக்கியமான கடமைகளுள் ஒன்று. சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல்களை அனைத்து மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்துவது சிறந்தது. சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பால்புட்டிகளைக் காண்பிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது என்பதை அனைவருக்கும் உணர்த்துவோம். எப்படி தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமையாகின்றதோ தாய்ப்பால் தருவதும் தாயின் கடமையாகின்றது. அதற்கு உதவுவது இந்த சமுதாயத்தின் கடமை.

error: Content is protected !!