March 21, 2023

ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம்!

சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்தார்.

‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் என பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவதார் புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவி குமாரசுவாமி மற்றும் சிவகுமார் குமாரசுவாமி, சூப்பர் டாக்கீஸுடன் இணைந்து, விஜய்டிவி புகழ் ராமர் – சஞ்சனா கல்ராணி நடிக்கும் இப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறது.

‘தமிழ் இனி’ குறும்படத்தின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரின் மனிதிலும் ஒருங்கே இடம் பிடித்த மணி ராம் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். மேலும், திரைப்படத்தின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், அமெரிக்காவின் தொழிட்நுட்ப தலைநகரான சிலிகான் பள்ளத் தாக்கில் இருந்து, தனது கனவை நனவாக்க தமிழ் திரையிலகில் தடம் பதித்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கிறது. இந்த கற்பனை-காமெடி-திரில்லர் படம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை கற்பனையும் நகைச்சுவையும் கலந்து திரில்லிங்காக படம் பிடித்து காட்டுகிறது. இந்நிலையில் ஒரு முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் படைக்கிறது.

ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். தயாரிப்பு மேற் பார்வை: ராஜா பக்கிரிசாமி

இப்படக்குழு நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.