சிப்ஸ் சாப்பிட்டா உடல் நலம் சிக்கலாகும்!

சிப்ஸ் சாப்பிட்டா உடல் நலம் சிக்கலாகும்!

சமீப காலமாக பெரும்பாலான நகரங்களில் தெருவுக்கு இரண்டு மூன்று ’சிப்ஸ்’ கடைகள் வந்து விட்டன. அதிலும் நிறைய வீடுகளில் சாப்பிடும்போதுகூட தொட்டுக்கொள்ள அப்பளமோ, வடகமோ இல்லையா? `கண்ணு… பக்கத்து கடையில போய் ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வா!’ என்று பிள்ளைகளை அனுப்பும் போக்கு அதிகரித்து விட்டது; திருமணப் பந்திகளில் பரிமாறப் படும் பொருளாகிவிட்டது; மதுப் பிரியர்களுக்கு பிரதானமான `சைடு டிஷ்’ என்ற பெயரையும் எடுத்து விட்டது. நேந்திரங்காய், வாழைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சேனை… என சிப்ஸுகளில் பல வகைகள் இருந்தாலும், உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் எக்கச்சக்கமானவர்களின் ஃபேவரைட். அமெரிக்காவில் இதை `பொட்டெடோ சிப்’ என்கிறார்கள்; இங்கிலாந்தில், `க்ரிஸ்ப்’ (Crisp) என்கிறார்கள்.

கொத்தவரங்காய் வற்றல், இலை வடாம், ஜவ்வரிசி வடாம், சோற்று வடாம்… என்று விதவிதமான பொரித்துச் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளைக் கண்டுபிடித்தது நம் பாரம்பர்யம். அது உருளைக்கிழங்கையும் விட்டுவைத்திருக்காது என்றே நம்பலாம். ஆனால், ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகுதான் உருளைக்கிழங்கு இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கியது என்றே சொல்கிறார்கள். அதனால்தான், `1853-ம் ஆண்டு, உருளைக்கிழங்கு சிப்ஸை ஜார்ஜ் க்ரம் (George Crum) என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார்’ என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்கிறார்கள்.
உருளைக்கிழங்கு-சிப்ஸ்

ஜார்ஜ் க்ரம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். நியூயார்க்கில், சாராடோகோ ஸ்ப்ரிங் ரிசார்ட்டில் ( Saratoga Springs) உள்ள மூன் லேக் லாட்ஜின் சமையல்கலை நிபுணர். அந்த ஹோட்டலுக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், கொஞ்ச நாட்களாக ஒரு புகார் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்… “என்னப்பா நீங்க வறுத்துக் குடுக்குற உருளைக்கிழங்கு கெட்டியா, தடிமனா இருக்கு, மெத்து மெத்துனு இருக்கு. சாப்பிடுற மாதிரி செஞ்சு தர மாட்டீங்களா?’’ இந்தப் புகார் ஜார்ஜை ஒரு கட்டத்தில் எரிச்சலின் உச்சிக்கே கொண்டுபோனது. `இந்த ஆள் அடங்கவே மாட்டானா?’ என யோசித்தவர், அந்த வாடிக்கையாளருக்கு பாடம் கற்றுத்தர முடிவு செய்தார்.

அன்றைக்கு அந்த வாடிக்கையாளர் மூன் லேக் லாட்ஜுக்கு வந்திருந்தார். ஜார்ஜ், உருளைக் கிழங்கை எடுத்து எவ்வளவு மெல்லியதாக முடியுமோ, அவ்வளவு மெலிதான ஸ்லைஸ்களாகச் சீவினார். வழக்கமாகச் செய்வதுபோல உருளைக்கிழங்கை வறுக்காமல், வேண்டுமென்றே அப்பளம் மாதிரி உடைகிற பதத்துக்கு உருளைக்கிழங்கை பொரித்தெடுத்தார். அதில் உப்பைத் தூவினார். வாடிக்கையாளருக்குப் பரிமாறச் சொன்னார். அன்றைக்கு ஜார்ஜ் எதிர்பார்க்காதது நடந்தது. புது உருளைக்கிழங்கு வறுவல் அந்த வாடிக்கையாளருக்குப் பிடித்துப்போனது. புதுவகை ஸ்நாக்ஸாகப் பிறந்தது சிப்ஸ். அதன் பிறகு, 1860-ம் ஆண்டில், `க்ரம்ப்ஸ் ஹவுஸ்’ என்ற சொந்த ரெஸ்டாரன்ட்டை உருவாக்கும் அளவுக்கு ஜார்ஜ் சிப்ஸால் வளர்ந்தார்.

ஜார்ஜ் சிப்ஸைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மேற்கத்திய நாடுகளில் அது இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1817-ம் ஆண்டு வெளியான சமையல் புத்தகம், `தி குக்ஸ் ஆரகிள்’ (The Cook’s Oracle). இதை வில்லியம் கிச்சனர் (William Kitchiner) என்பவர் எழுதியிருந்தார். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் `பெஸ்ட் செல்லர்’ புத்தகம் வேறு. அந்தப் புத்தகத்திலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் இருந்ததற்கான குறிப்பு இருக்கிறது. ஆனாலும், ஆதாரபூர்வமாக ஜார்ஜ் க்ரம்தான் சிப்ஸைக் கண்டுபிடித்தவர் என்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்மேன் லே என்பவர், சிப்ஸை விற்பதற்கு புதிதாக ஒரு வழியைக் கண்டுபிடித்தார். சிப்ஸ்களை பாக்கெட்டுகளில் போட்டார். அதைத் தன் காரில் எடுத்துக் கொண்டுபோய் அவர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைக்காரர்களுக்குப் போட ஆரம்பித்தார். வியாபாரம் சூடுபிடித்தது. அது பிரபலமாகி அமெரிக்காவின் முதல் வெற்றிகரமான உருளைக் கிழங்கு சிப்ஸ் கம்பெனியாக லேய்’ஸ் (Lay’s) உருவானது. இது ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1932. இப்போது அமெரிக்காவில் `நேஷனல் பொட்டெட்டோ சிப்ஸ் டே’ எல்லாம் கொண்டாடுகிறார்கள். அதிருக்கட்டும்.. இந்த சிப்ஸ் உடலுக்கு நல்லதா என்றால், `இல்லை’ என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில்.

அதாவது “எண்ணெயில் தயாரிக்கப்படும் எல்லா உணவுகளுமே, உடலுக்குக் கேடு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தப் புரிதலை மீறி, ஒருவரை ஓர் உணவு ஈர்க்கிறது அல்லது கவர்கிறது என்றால், அதற்கு அதன் சுவைதான் முக்கியக் காரணம். இப்படி சுவைக்கு அடிமையாக வைக்கும் ஒரு ஸ்நாக்ஸில் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்து, சோடியம் என்ற மூன்று வகை சத்துகள் மட்டுமே இருக்கின்றன. இவையும்கூட, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட் கொண்டால் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உடல் உபாதைகளை ஏற்படுத்துபவை. ஆரோக்கியமான வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்கள், மிகக் குறைந்த அளவே இவற்றை உட்கொள்ள வேண்டும்” என்கிறார்கள்

அது சரி.. எப்படி, எதைக் கொண்டு தயாராகிறது சிப்ஸ்… அதன் பக்கவிளைவுகள் என்னென்ன?

குறிப்பிட்ட கிழங்கு மற்றும் காய்களைத் தேர்வு செய்வதிலிருந்து தொடங்குகிறது சிப்ஸின் தீமைகள். பல இடங்களில் அழுகிய அல்லது சேதமடைந்த காய், கிழங்கு வகைகளைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். மற்ற கிழங்குகளைவிட, உருளைக்கிழங்கு மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

சின்னக் கடையிலிருந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பல இடங்களில் ஒருமுறை பயன் படுத்திய எண்ணெயைத்தான் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துகிறார்கள். இப்படிப் பயன் படுத்துவது, எண்ணெயிலுள்ள கொழுப்புச்சத்துகளை, ட்ரான்ஸ் ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பாக மாற்றிவிடும். ட்ரான்ஸ் ஃபேட், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய அடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும்சிப்ஸ் பாக்கெட்களில், ட்ரான்ஸ் ஃபேட் அளவு வெளிப் படையாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என சிலர் நினைக்கலாம். அதன் உண்மைத் தன்மை, பல நேரங்களில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிப்ஸ்களில் சேர்க்கப்படும் உப்பின் சுவை, சாப்பிடுபவரை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தம், எலும்புப்புரை, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.

சிப்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, மேலும் மேலும் அதைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். சிலர் ஸ்ட்ரெஸ் பஸ்டராகக்கூட இதை உட்கொள்வதுண்டு. இதிலிருக்கும் கார்போஹைட் ரேட்ஸ்தான், இந்தத் தூண்டுதலுக்குக் காரணம். மிக எளிதாகக் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸில்தான் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்ஸ் வகைகள், முழுக்க முழுக்க கலோரிகளால் ஆனவை. இரண்டு உள்ளங்கை நிறைய சிப்ஸ் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் கலோரிகளைக் கரைக்க, குறைந்தபட்சம் 10,000 அடிகளாவது நடக்கவேண்டியிருக்கும். அளவுக்கதிகமாக சிப்ஸ் சாப்பிடுபவர்கள், அவற்றில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் நடைப்பயிற்சியை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு பஜ்ஜி, சிப்ஸ், போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை, சுத்தமான முறையில் வாரத்துக்கு ஒருமுறை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். பல பெற்றோர், குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு சைடிஷ்ஷாக சிப்ஸை கொடுத்து அனுப்புவார்கள். ‘குழந்தை இதைத்தான் விரும்பி சாப்பிடுறான்’ என்று இதற்குக் காரணமும் சொல்வார்கள். உண்மையில், குழந்தைக்கு ஹெல்த்தி உணவுகளை அடிக்கடி கொடுத்து, அதில் எது குழந்தைக்குப் பிடிக்கிறது என்பதைக் கண்டறிந்தால், சிப்ஸ் போன்ற மோசமான ஸ்நாக்ஸைக் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் ஒரு பாக்கெட் சிப்ஸில், கலோரி அளவு நூறுக்கு மேல் இருக்கும். இவ்வளவு கலோரிகளை ஒரே நேரத்தில் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களின் வளர் சிதை மாற்றத்தில் பாதிப்புகளும் பிரச்னைகளும் ஏற்படும். சர்க்கரைநோய், இதயப் பிரச்னை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள பெரியவர்களுக்கு, அந்த பாதிப்பு தீவிரமடையும். எனவே, குழந்தையோ, பெரியவரோ… சிப்ஸ் சாப்பிடுவதை முழுமையாகத் தவிர்க்கவும். இரவு உணவோடு சிப்ஸ் சாப்பிடுபவர்கள், அதற்குப் பிறகு கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். இல்லையென்றால், பல் மற்றும் ஈறு பிரச்னைகள் ஏற்படலாம்.

எந்தக் காய்கறி, கிழங்கையும் வறுத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுபவர்கள், அதற்குப் பதிலாக பாப்கார்ன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து சிப்ஸ் சாப்பிடுவது, தூக்கமின்மைப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், தவிர்ப்பதே சிறப்பு. வேண்டுமென்றால், வீட்டிலேயே செய்து வாரம் ஒரு முறை, கொஞ்சமாகச் சாப்பிடலாம்’’ என்றும் எச்சரிக்கையுடன் ஆலோசனை சொல்கிறார்கள்.

error: Content is protected !!