March 21, 2023

ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது ஏன் தெரியுமா?

நேற்று முழுதும் ட்விட்டர் சற்று ‘கார’மாக இருந்திருக்கிறது.

காரணம், ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் அறிமுகமாகி ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த ட்ரெண்ட்க்கு காரணம் ஒரே ஒரு ட்வீட் தான். அது ஆரியத்தின் தனிப்பெரும் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் எச்.ராஜாவின் ட்வீட் தான்.

ஆமாம், அவர் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அது,” சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் இயக்கத்தை சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்”.

ஆக யார் இந்த காரப்பன்? இவருக்கும் எச்.ராஜாவுக்கும் என்ன பிரச்சினை என்று ஆராய்ந்தால் தனிப்பட்ட பிரச்சினை ஏதும் இல்லை. காரப்பன் ஒரு திராவிட இயக்க ஆதாரவாளர். அந்த அடிப்படையில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அது அய்யா சுப.வீ அவர்கள் தலைமையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சி. அதில் காரப்பன் உரையாற்ற அழைக்கப்படுகிறார். அவர் தம் வியாபாரம் சார்ந்து பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் ஒரு செய்தியை சொன்னார்.

“பார்ப்பனர்கள் அணிகிற பூணூல் எச்சில் படாததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால், எச்சில் படாமல் நூல் நூற்பது, நெய்வது சாத்தியம் இல்லை. நெசவாளர்களின் எச்சில்பட்ட நூலை அணிந்த பார்ப்பனர்கள் தீட்டு பற்றி பேசுவது…”, என உரையாற்றி இருக்கிறார். இது எச்.ராஜாவுக்கு வலித்துவிட்டது. அவர் பேச்சில் வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடியிருக்கின்றனர்.

காரப்பன் தன் பேச்சில் நெசவாளர்களின் துன்பத்தை சொன்னவர், துணியை நெய்த நெசவாளர் களை விட விற்பனை செய்பவர்களுக்கு லாபம் என குறிப்பிட, மகாபாரதத்தில் கிருஷ்ணர் சேலை கொடுத்து காப்பதாக சொல்வார்கள், அவரா நெய்தார்? கிருஷ்ணன் சேலைகளை திருடுபவர். ஆனால் அவரை தான் வணங்குவார்கள் என்ற அர்த்தத்தில் உரையாற்றி இருந்ததை எடுத்து வைத்துக் கொண்டு தங்கள் பிரச்சாரத்தை துவங்கினர்.

இவர்களின் நோக்கம் எல்லோரையும் பயமுறுத்துவது, எதிர் சிந்தனையுள்ளோரை நசுக்குவது. அந்த வகையில் தான், இந்த துர்பிரச்சாரத்தை கையில் எடுத்தனர்.

வழக்கமான சங் பரிவார் ஆயுதமான வாட்ஸ் அப்பில் இது பரப்பப்பட்டது. ட்விட்டரில் பரப்பப்பட்டது. கூகுளில் கொடுக்கப்படும் ஸ்டாரை குறைக்க பரப்புரை செய்தார்கள். எல்லாவித நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டன. அவரை சூழ்ந்தவர்கள் வற்புறுத்தலின் பேரில், காரப்பன் ” வருத்தம்” தெரிவித்து ஒரு காணொளி வெளியிட்டார். ஆனாலும் சங்கி கோஷ்டி விடவில்லை. தமிழர்களின் தொழிலை நொறுக்குவது நோக்கமாக இருக்கலாம்.

இதை தோழர் ராஜராஜன் கவனத்தில் கொண்டு எதிர் வினையாற்றி இருக்கிறார். ட்விட்டர் அனல் பறந்திருக்கிறது. இதில் சிறப்பு அம்சம், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணைந்தது. மொழி தெரியாமல், பிரச்சினை தெரியாமல் திராவிடர்கள் அடிக்கிறார்கள் என்பதால், நாமும் ரெண்டு அடி போடுவோம் என ட்வீட்டி இருக்கிறார்கள். ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி இருக்கிறது.

ட்விட்டர் ட்ரெண்ட் ஆனது முக்கியமல்ல. காரப்பன் சில்க்ஸ் வியாபாரமும் ட்ரெண்ட் ஆகி யிருக்கிறது. கோவை மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள சிறு ஊர் சிறுமுகை. இங்கே விஸ்கோஸ் ஆலை செயல்பட்ட போது, ஊரில் உள்ள வியாபார நிறுவனங்கள் ஓரளவு வியாபாரம் பார்த்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை. அங்கே உள்ள ஒரு துணி விற்பனையகம் தான் காரப்பன் சில்க்ஸ். மற்ற நிறுவனங்களை விட, சற்றே சமூக அக்கறையோடு செயல்படுபவர் காரப்பன். நெசவை கற்பித்து, பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டும் பணியையும் செய்து வருகிறார் காரப்பன்.

காரப்பன் செய்த அந்த தர்மம் இப்போது தான் அவர் தலை காத்திருக்கிறது. எச்.ராஜா தான் தர்மமாக வடிவெடுத்தார். ஆமாம், காரப்பன் சில்க்ஸின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது, காரணம் எச்.ராஜா ட்வீட். காரப்பன் அவர்களே நன்றி தெரிவித்து விட்டார்.

இது இத்தோடு விட்டு விடுகிற சம்பவம் அல்ல.

நேற்றே நண்பர்கள் குறிப்பிட்டது போல, சங் பரிவார் ஆதரவாளர்களாக திகழும் சென்னை சரவணா செல்வரத்னா ஸ்டோர்ஸ், ராமராஜ் வேட்டிகள், அதே போல் பார்ப்பனிய வெறி பிடித்த முதலாளிகளின் நிறுவனங்களை குறி வைத்து தாக்குதல் துவங்கினால் அவர்கள் எங்கு ஓடுவார்கள் ?

தமிழகம் முழுதும் ஓட்டல் தொழில் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் நடத்தப்படுகிறது. அதே போல மளிகைக் கடை ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில். நகைக்கடை, பாத்திரக்கடை, ஜவுளிக்கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். யாரும் சாதி பார்த்து கடைக்கு போவதில்லை. பொருளின் தரம் பார்த்தே போவார்கள். புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன்.

ஒரு கட்டத்தில் தமிழகத்தில் திராவிடர்கழகத்தின் பலம் பெருகியது. பார்ப்பனியத்தை எதிர்த்த திராவிட இயக்கம், பார்ப்பனியர்கள் தொழிலை நசுக்கவில்லை. ஆரியபவனிலும், உடுப்பி ஓட்டலிலும் சாப்பிட்டார்கள்.

பெரியார் குறித்து இன்னும் கூட சொல்வார்கள். “பார்ப்பானையும், பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பனை அடி”, என்று பெரியார் சொன்னதாக தினமலர் வகையறாக்கள் இன்றும் சாதிப்பார்கள். பெரியார் அப்படி சொன்னதில்லை. அப்படி நினைத்ததுமில்லை. கருத்தியல் ரீதியாகத் தான் எதிர் கொண்டார். அப்படி நினைத்திருந்தால், தி.மு.க ஆட்சி அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட போது எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். எச்.ராஜாக்கள் கரை ஏற்றப் பட்டிருப்பார்கள்.

எனவே எச்.ராஜாக்களே,

எங்களுக்கும் பார்ப்பன நண்பர்கள் உண்டு. நாங்களும் பார்ப்பனர்கள் கடையில் பொருள் வாங்குவோம். அதற்கு எதிரான நிலையை உருவாக்கி விடாதீர்கள்.

நட்டம் உங்களுக்கு தான்.

(ஒரு நாள் காரப்பன் சில்க்ஸ் சென்று, துணிகள் வாங்கி வர வேண்டும்)

#WeSupportKarappanSilks

-எஸ்.எஸ்.சிவசங்கர்.