March 31, 2023

நாம் நிலத்தடி நீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்!

தண்ணீரை அடிப்படை வளமாக பார்க்காமல் விற்பனை பண்டமாக பார்த்ததன் விளைவுதான் தற்சமயம் நடைபெறும் “டேங்கர் லாரிகளின்” வேலைநிறுத்தம். காலநிலை மாற்றத்தோடு நம்மை அச்சுறுத்தும் இன்னொரு விசயம் “நிலத்தடிநீர் பேரிடர்”. தற் சமயம், நம்முடைய விவசாயத்திற்கு தேவைப்படும் நீரில் 70% பூர்த்திசெய்வது நிலத்தடி நீர் ஆதாரங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரின் அளவில் 90% பூர்த்திசெய்வதும் நிலத்தடி நீரே.

1960களில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியோடு சேர்ந்துவந்த உரம் சார்ந்த விவசாயம், பயிர் விளைச்ச லுக்கு அதிகமான நீரை கோரியது அதன் விளைவாக தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணறுகள் அதிக அளவில் தோன்றின, நீரின் அளவும் குறைந்தது. நீர்நிலைகள் ஆக்கிரமித்தல், ஆறுகளில் நடைபெற்ற/நடைபெறும் மணல்கொள்ளை நிலத்தடி நீரை மீள்நிரப்பம் செய்யமுடியாமல் போனது, அதனால் நிலத்தடி நீர்நிலைகள் வற்றிப்போயின.

அதே நேரம் நம்முடைய குடிநீர் ஆதாரங்களும் அழிக்கப்பட்டதன் விளைவாக இப்போது நமக்கு தேவையான குடிநீருக்கு 30% நிலத்தடி நீரைத்தான் நம்பியுள்ளோம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி அதிகமான தொழிற்ச்சாலைகளை இந்நிலத்தில் காலூன்றவைத்தது, அதன் தேவையில் 90% நீர் பூமிக்கடியில் இருந்து உறிஞ்சப்பட்டது, இது கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்ட விளைவு.

பழைய மாமல்லபுரம் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் இல்லங்கள், அவர்களின் வீடுகளிலுள்ள நீச்சல் தொட்டிகள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் தண்ணீருக்கான வணிகம் வாரத்திற்கு 200 கோடி. யோசித்துப்பாருங்கள் நாம் எவ்வளவு பெரிய அழிவில் வந்து சிக்கிக் கொண்டுள்ளோம் என்று.

இப்போது நடைபெறும் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்திற்காக அரசு இறங்கிவந்தது சில சலுகைகளை வழங்கலாம் ஆனால், நாம் நிலத்தடி நீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்பது முற்றிலும் உண்மை.

இன்றில்லாவிட்டாலும் நாளை அந்த உண்மை நமக்கு முகத்தில் அறையும், அப்போது காலம் கடந்திருக்கும்.

தண்ணீர் என்பது அடிப்படை வளம், அதை விற்பதற்கோ வாங்குவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது என்று அரசு அறிவித்து, ஒவ்வொரு குடிமகனிற்கும் தேவைப்படும் தண்ணீரை குழாய்களில் கொண்டு சேர்க்கும் கடமை அரசிற்குரியது.

செய்யுமா?

சுந்தர் ராஜன்