விஸ்வநாதன் ஆனந்த் : சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு!
தமிழக தலைநகர் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவதால் உலக அளவில் தமிழ்நாட்டின் பெருமை சென்று சேர்ந்துள்ளது. இச்சூழலில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE)துணைத் தலைவராகத் தமிழ்நாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்வு நடைபெற்றது. அதில், ஆர்கடி டிவோர்கோவிச் 157 வாக்குகளில் இரண்டாம் முறை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். iவரை எதிர்த்து களம் இறங்கிய ஆண்ட்ரீ பாரிஸ்போலெட்ஸ்-க்கு வெறும் 16 வாக்குகள் மட்டும் கிடைத்தன.அதே சமயம் ஆர்கடி டிவோர்கோவிச் அணியில் உள்ள இந்திய நாட்டின் செஸ் கிராண்ட் மாஸ்டரும் தமிழகத்தை சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து விஸ்வநாதன் ஆனந்துக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விஸ்வநாதன் ஆனந்த் 1988 இல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றார். 2006இல் எலோ ரேட்டிங் (Elo rating), அதாவது செஸ் விளையாட்டில் விளையாடுபவர்களின் திறமையைக் கணக்கிடும் அளவில் 2800 புள்ளிகள் பெற்று உலகளவில் செஸ் வரலாற்றில் அந்த அளவை பெறும் நான்காவது நபர் எனும் பெருமையைப் பெற்றார் விஸ்வநாதன் ஆனந்த். மேலும் உலகத் தர வரிசையில் 21 மாதங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும் உலகளவில் அதி வேகமாக செஸ் விளையாடக் கூடிய செஸ் வீரராக வலம் வந்துள்ளார்.