”வித்யாசாகர் ராவ் – ஆகிய நான்…!” – தமிழக கவர்னராக பொறுப்பேற்றார்!

”வித்யாசாகர் ராவ் – ஆகிய நான்…!” – தமிழக கவர்னராக பொறுப்பேற்றார்!

தமிழக கவர்னராக வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. முதலில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சுருக்கமாக இசைக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், தமிழக கவர்னராக வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஏற்பது குறித்த ஜனாதிபதியின் உத்தரவை படித்து, அவரை பொறுப்பு ஏற்குமாறு அழைத்தார். அதைத்தொடர்ந்து வித்யாசாகர் ராவுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

tn sep 3

கவர்னராக பொறுப்பு ஏற்றதும் வித்யாசாகர் ராவ் அதற்கான உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டார். பின்னர் போலீஸ் இசைக்குழுவினர் தேசியகீதம் இசைத்தனர். பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுலும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார். அதுபோல தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்ற நீதிபதிகளை அறிமுகப்படுத்தினார்.

இந்த விழாவில் கவர்னரின் மனைவி வினோதா, மகன் விவேக், மருமகள் சரிதா, தமிழக அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், சென்னை மேயர் சைதை துரைசாமி, பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செயின்ட்ஜான்ஸ் ஆம்புலன்சு அமைப்பாளரும், செஞ்சிலுவை சங்க தமிழக கிளையின் துணைத்தலைவருமான டாக்டர் வடிவேல் முகுந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த வித்யாசாகர் ராவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், தலைமை செயலாளர் ராமமோகன ராவ், டி.ஜி.பி. அசோக்குமார், போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் வித்யாசாகர் ராவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

error: Content is protected !!