அம்பேத்கர் பெயரில் ‘ராம்ஜி’ என்று சேர்க்க உ.பி. அரசு உத்தரவு!
இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படுபவரும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராடியவருமான அம்பேத்கரின் பெயரை ‘ராம்ஜி’ அம்பேத்கார் என ஆவணங்களில் சேர்க்க உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை டாக்டர்.பீம்ராவ் அம்பேத்கர் என்றே அனைத்து அரசு ஆவணங் களிலும் இடம்பெற்றுள்ளது. இதனையே இனி பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றே குறிப்பிட வேண்டும் என உ.பி., அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ராம்ஜி என்பது அம்பேத்காரின் தந்தை பெயர் ஆகும். உ.பி., கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று, உ.பி., அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. உ.பி., அரசின் இந்த உத்தரவிற்கு சமாஜ்வாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர்.
‘‘பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர்’’ என அழைக்கப்படும் ‘‘பீம்ராவ் ராம்ஜி’’ கடந்த 1891 ஏப்ரல் 14ஆம் நாள் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் தம்பதியருக்கு 14வது குழந்தையாக பிறந்தார். இவருடைய தந்தை ராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.‘‘மகர்’’ என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி, ‘‘சாத்தாராவில்’’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’’ என்ற பெயரை, ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’ என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.