மோட்டார் வாகன துறை சரிவுக்கு ஊபர், ஓலா -வும்தான் காரணம் – மத்திய நிதி அமைச்சர் பேட்டி – வீடியோ!
மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘மோட்டார் வாகன துறை சரிவுக்கு அதிக வரி விதிப்பு மட்டுமே காரணம் அல்ல என்றார். ஓலா, உபர் போன்ற வாடகை கார்கள் மற்றும் அரசுப் போக்கு வரத்தை பயன்படுத்தும் மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற பல் வேறு காரணி களால் வாகன விற்பனை சரிந்துள்ளது என்று தெரிவித்தார். அதே சமயம் ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் நிர்மலா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு 2-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு மேற்கொண்ட உறுதியான செயல்பாடுகள் குறித்து மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் எடுத்து உரைத்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் உறுதியான செயல்பாடுகள் குறித்து சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மத்திய அரசின் 100 நாள் சாதனை புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு இருக்கிறது. அரசியல் சட்டப்படி, 370–ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் சட்டப்பிரிவு 35(ஏ)–யை யும் ரத்து செய்தது.
காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் நிலைப் பாட்டை உலக நாடுகளே ஆதரிக்கின்றன. சட்டங்கள் மூலம் அனைவரும் ஒரே மாதிரியான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தின் சமூக பொருளாதார கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றும் ஒரு அங்கம் தான், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான அடிப்படை உள்கட்டமைப்பு வசதி திட்டங்களை கொண்டு வருவதற்கு ஒரு சிறப்பு படை (ஸ்பெஷல் ஸ்குவார்டு) அமைக்கப் பட்டு இருக்கிறது. இவர்கள் ஆராய்ந்து, உடனடியாக எந்தெந்த துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்று அறிந்து முதற்கட்டமாக நிதி ஒதுக்குவார்கள். இதனால் நாட்டின் வளர்ச்சி மேம்படும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 5 சதவீத மாகக் குறைந்துள்ளது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதேபோல், தொழில் துறைக்கு தேவையான உதவிகளை அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஓலா, உபர் போன்ற வாடகை கார்கள் மற்றும் அரசுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளால் வாகன விற்பனை சரிந்துள்ள நிலையில் மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்கும் வகையில் அதன் மீதான சரக்கு சேவை வரியை நீக்கி இருக்கிறோம். அதேபோல், பயன்பாட்டு கட்டணத்தையும் நீக்கியுள்ளோம். முத்தலாக் நடைமுறையை ஒழித்து இருக்கிறோம். குழந்தைகள் உரிமையை பாதுகாக்க போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கிறோம்.
வளர்ச்சி திட்டங்களான அனைவருக்கும் வீடு, மின் இணைப்பு, குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு சென்றடையாதவர்களுக்கு சென்றடைய செய்து வருகிறோம். நடைமுறைக்கு தேவையற்ற, ஊழலுக்கு வழிவகுத்த 58 தேவையில்லாத சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
சந்திரயான்–2 திட்டத்தில் 99.9 சதவீத நோக்கம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த திட்டத்துக்கு அரசு இயன்ற வரை ஆதரவு அளித்தது. இனிமேலும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று அவர் கூறினார்.
கேள்வி:- வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா?
பதில்:- ஜி.எஸ்.டி. கூட்டம் வருகிற 20–ந் தேதி கூடுகிறது. அதில் என்ன முடிவுகள் எடுக்கப் படுகின்றன என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. வாகன உற்பத்தி துறை சார்ந்தவர் களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுக்கும்.
கேள்வி:- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) சதவீதம் குறைந்து இருக்கிறதே….?
பதில்:- கடந்த காலங்களிலும் இது போல் குறைந்து இருக்கிறது. அதுபற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் ஏற்றம் இறக்கம் என்பது வழக்கமான ஒன்றுதான். அடுத்த காலாண்டு வளர்ச்சியை உயர்த்த முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கான இலக்கை இப்போது சொல்ல முடியாது. பதில்:- தங்கத்துக்கான மூலப் பொருள் இந்தியாவில் இல்லை. இறக்குமதியை நம்பித்தான் சார்ந்து இருக்கிறோம். இறக்குமதி, டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயம் செய்யப்படும் தங்கம் விலையை, மத்திய அரசு கட்டுப்படுத்துவது எளிது அல்ல. ஆபரணத்துக்காக மட்டும் தங்கம் பயன்படுத்துவது இல்லை. முதலீட்டுக்காகவும் பயன்படுகிறது.
கேள்வி:- சென்னை –ரஷியா இடையே கடல்வழி போக்குவரத்துக்கான ஒப்பந்தத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- இந்த போக்குவரத்தினால் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி அதிகரிக்கும். இதனால் இங்குள்ள பொருளாதாரம் பன்மடங்கு உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பேட்டியின் போது பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் ஏ.மாரியப்பன் உடன் இருந்தார்.
PIB Tamil Nadu – Union Finance Minister Press Conference, Chennai https://t.co/keKlzNsi9f
— PIB in Tamil Nadu (@pibchennai) September 10, 2019