ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் நாட்டை சேர்க்க தயக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் நாட்டை சேர்க்க தயக்கம்!

ரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டப் போது உடனடியாக உக்ரைனை தங்கள் கூட்டமைப்பில் சேர்க்க முடியாது என பல நாட்டுத் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. இதனிடையே இருதரப்பும் பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமைத்ரோ குலேபாவும் நேற்று முன்தினம் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நவுஸ்தா கூறும்போது, “5 மணி நேர விவாதங்களுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்ரைனின் ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு சம்மதம் என்று தெரிவித்தனர். அதற்கான செயல்முறை தொடங்கியது. அதை விரைவாக நிறைவேற்றுவது நமக்கும், உக்ரைனுக்கும் முக்கியமானது. வீர உக்ரைனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவேற்கப்படுவதற்கு தகுதி உடையது” என்றார்.

அதே சமயம் இந்த கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், “உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது சேர்ப்பது விவேகமான முடிவு அல்ல” என்றார்.

இதேபோல, இந்தக் கூட்டத்தில் பேசிய மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களும், உடனடியாக உக்ரைனை தங்கள் கூட்டமைப்பில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

error: Content is protected !!