ஃபேமிலியோடு ஃபிளைட் பயணம் செய்ய இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம்!
விமானப் பயணம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதிலும் குடும்பத்தோடு ஃபளைட்டில் பறக்க பலருக்கும் ஆசை இருந்தாலும் பேமண்ட் பற்றாக்குறையால் இது சாத்தியமில்லாமல் இருக்கிறது.இதனிடையே ஐக்கிய அரசு நாடுகளில் ஒன்றான அபுதாபியைச் சேர்ந்த எதிஹாத் ஏர்வேஸ் என்னும் நிறுவனம், விமானப் பயணம் மேற்கொண்ட பின்னர் அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாதாந்திர தவணை அடிப்படை யிலும் கட்டணத்தைச் செலுத்த அந்நிறுவனம் வழிவகை செய்துள்ளது. குடும்பமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று எதிஹாத் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்ப டுத்த ‘பே போர்ட்’ என்னும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனத்துடன் எதிஹாத் ஏர்வேஸ் கை கோர்த்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் எதிஹாத் ஏர்வேஸ் விமான இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, கட்ட ணத்தை எத்தனை மாதங்களில் திருப்பிச்செலுத்துவோம் என்பதை குறிப்பிட வேண்டியது அவசியம். இதைப் பயன்படுத்த வங்கிக்கணக்கும், அதே வங்கியில் கிரடிட் கார்டும் வைத்திருப்பது அவசியம். 17 வங்கிக்கணக்குகளுக்கு இந்த திட்டம் பொருந்தும். கட்டணத்தொகையை 3 முதல் 60 மாதங்கள் வரை தவணை முறையில் திருப்பிச் செலுத்தலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இப்போது இந்தத் திட்டம் பொருந்தும் என்று எதிஹாத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள முதல் நிறுவனம் என்ற பெருமையை எதிஹாத் ஏர்வேஸ் பெறுகிறது.