டி.வி. பார்க்கறவங்க எண்ணிக்கை ஜஸ்ட் 23 சதவீதம் மட்டுமே!
தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இன்றைய இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாயந்த சாதனங்களில் ஒன்றாக நிலை பெற்றுள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனமாக தொலைக்காட்சி முன்னிலை வகிக்கின்றது. 1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதன் காரணமாக காலத்திற்கு காலம் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக விளங்கும் தொலைக்காட்சி உலகையே ஆட்சி செய்யும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது என்றும் அதுதான் இன்றளவும் டாப் என்றுதானே நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி பார்ப்பவர்களின் எண்ணிகை 52 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்றவற்றில் நிகழ்ச்சிகள் பார்ப்பதையே அதிகம் பேர் விரும்புவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அக்சென்சர் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 26 நாடுகளில் 26 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் 23 சதவீதம் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 52 சதவீதமாக இருந்த இந்த அளவு இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.
42 சதவீதம் பேர், ஸ்மார்ட் போன், லேப்டாப், டெஸ்க் டாப் ஆகிவற்றில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கே விரும்புகிறார்கள். கடந்த ஆண்டு நடத்திய கருத்துக்கணிப்பில் 32 சதவீதமாக இருந்த அளவு தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
13 சதவீதம் பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஸ்மார்ட் போனில் பார்க்க விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 10 சதவீதம் பேர் இந்த கருத்தை தெரிவித்தனர். இணைய பயன்பாடு, இணையத்தில் கிடைக்கும் உயர்தர வீடியோக்கள், இணைய நேரலை ஒளிபரப்பு ஆகியவை இந்த மாற்றத்திற்குக் முக்கியமான காரணங்களாக கூறப்படுகிறது.