பரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்!- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு!
தமிழகத்தில் பார்லிமெண்ட் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வரும் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தங்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் வழங்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் வேலூர் நீங்கலான 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு ஒரே சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தற்போது மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19-அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதையடுத்து இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த டிடிவி, சமீபத்தில் அமமுகவை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தங்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் வழங்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். டிடிவி தினகரன் சார்பில் மனுவை தாக்கல்செய்துள்ள வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஒரே சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவை தனது மனுவை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.