அமுமுக பொதுச் செயலாளரரானார் டிடிவி. தினகரன்!

அமுமுக பொதுச் செயலாளரரானார் டிடிவி. தினகரன்!

ஆளும் கட்சியான அதிமுகவுக்கு., எதிர் கட்சியான திமுகவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்து வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். அ.ம.மு.க.வை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம. .க) உதயமானது. டி.டி.வி. தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன், நேற்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், அவர் அ.ம.மு.க. தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அ.ம.மு.க.வை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் நடிகை சி.ஆர். சரஸ்வதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதே சமயம் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அ.ம. மு.க.வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டுள்ளேன். சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார். எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன்.

சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். அ.ம.மு.க. துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை பின்னர் அறிவிப்போம். அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார். சட்டபோராட்டத்தில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றினால் அ.ம.மு.க.வுடன் அ.தி.மு.க.வை இணைப்போம். அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாண பத்திரம் பெற்றுள்ளோம். அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக வருகிற 22-ந்தேதி மனு அளிக்க உள்ளோம்.

4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னத்தை கேட்டுள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றதால் தொண்டர்கள் தொடர்ந்து குக்கர் சின்னத்தை விரும்புகிறார்கள். அ.ம.மு.க. சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 22-ந் தேதி வெளியிடப்படும். அ.தி.மு.க.வில் 95 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. கட்சியே காணாமல் போகப்போகிறது. அமைச்சர்கள் மட்டும் கட்டில் பிடித்து அழுகிற காலம் வரப்போகிறது” என்றார் தினகரன்.

error: Content is protected !!