பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் பலி! – இத்தாலி சோகம்
தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்று பிராந்திய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறி உள்ளனர். கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையே ஒரு வழி ரயில் பாதையில் சென்ற ரயில்கள் புக்லியா என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ரயில்கள் மோதிய வேகத்தில் பெட்டிகள் சுக்கு நூறாக உடைந்தன. தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிராந்திய அதிகாரிகள் பேசுகையில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இரத்தம் தேவைப்படுகிறது, உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று விபரங்களை வெளியிட்டனர். கிராம புறத்தின் மத்தியில் விபத்து நேரிட்டு உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஒருவழி பாதையில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதற்கான பின்னணி காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம், அதிகாரிகளை விபத்து நேரிட்ட பகுதிக்கு அனுப்பி உள்ளது.
விபத்து தொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் கொடூரமாக உள்ளது ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. விபத்து துன்பகரமான தருணம் என்று இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸி கூறி உள்ளார். இதற்கிடையே அப்பகுதியான விமானம் விபத்துக்குள்ளானது போல் காட்சி அளிக்கிறது என்று கோராடோ கவர்னர் கூறி உள்ளார்.