பன்னாட்டுக் கதை சொல்லும் நாள்!

பன்னாட்டுக் கதை சொல்லும்  நாள்!

ன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும் இந்த ‘கதை-சொல்லல் தினம்’, முதன்முதலில் 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தோன்றிச்சு. ஆனா சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்ட இந்த தினம், பின்னர் மேற்கு ஆஸ்திரேலியா-வில் வசித்த ‘கதை சொல்லிகள்’ மூலமாக 1997-ல், மீண்டும் உயிர்பெற்றுச்சு. இக்காலக்கட்டத்தில், தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இத்தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாச்சு.

பின்னர் 2001-ல், ‘ஸ்காண்டினேவிய கதை-சொல்லல் இணைய-அமைப்பு’ [Scandinavian storytelling web-network] “Ratatosk” என்னும் பெயரில் தொடங்கப்பட்டுச்சு. இந்நிகழ்வு குறுகிய காலத்திலேயே ஸ்வீடன் நாட்டிலிருந்து நார்வே, டென்மார்க், பின்லாந்து, மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளுக்கு 2003-களில் பரவியது. பின்பு, மிக விரைவிலேயே கனடா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கும் பரவிச்சாக்கும்.

இன்று இந்நிகழ்வு அகில உலக அளவில் ஒரு தினமாக அங்கீகாரம் பெற்று, ‘உலக கதை சொல்லல் தின’மாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகிலுள்ள ‘கதை சொல்லிகள்’ அனைவரும் ஒன்றிணைந்து பல ‘கதை சொல்லல்’ சார்ந்த நிகழ்வுகளை மக்களிடையே நிகழ்த்தி, அவர்களை மகிழ்ச்சிபடுத்துவர்.இவ்வாறு வழிவழியாக வந்த ஒரு சாதாரண நிகழ்வு, இன்று உலக அளவில் கொண்டாடப்படும் தினமாக அமைந்ததில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. ஆம்! மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு கதைகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிச்சயம் பிரயோகித்திருப்போம். அப்படிப் பார்ப்பின் நாம் ஒவ்வொருவரும் கதை சொல்லிகளே!

ஆனால் இந்தக் ‘கதை சொல்லல்’ கலை அல்லது வழக்கத்தின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது? முதல் கதை யார், யாருக்குச் சொன்னது? –என்பவை எல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை, ‘அனிமேஷன்’ படங்களில் வருபவைப் போல, ஒரு வயதான காட்டுவாசி இருண்ட குகையின் நடுவில் குளிர்காய மூட்டப்பட்டத் தீயைச் சுற்றியமர்ந்திருக்கும் மக்களுக்கு, கதைச் சொல்வது போல் நிகழ்ந்த ஒன்றாக இருக்குமோ! இருக்கலாம், நமக்குத் தெரியவில்லை!

ஆனால், இந்த ‘கதை சொல்லல்’ வழக்கம், அக்காலத்தில் நிகழ்ந்த தோல்வியின் காரணங்களை விளக்குவதன் பொருட்டுத் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அல்லது அச்சப்படும் நேரத்தில் பிறரை அமைதி படுத்தவோ, சந்தேகங்களைத் தீர்க்கவோ பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உத்தியாக இருக்கலாம்.

பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த வீரச்செயல்கள் மற்றும் மற்றைய செய்திகளைச் சுவைபட கூறும் திறன் படைத்தவரை மிக உயரிய மரியாதை அளித்து வந்தனர். இவர்கள் கூறும் கதைகளை மக்கள் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கேட்க விரும்பினர். பூசாரிகள், நீதிபதிகள், மற்றும் ஆட்சியாளர்கள் அப்பழங்குடி மக்களை வழிநடத்த இக்கதை சொல்லல் கலையை திறம்படக் கையாண்டு மிக முக்கியமாகக் கருதி வந்துள்ளனர்.

மனிதன் எழுதக் கற்றுக்கொள்ளும் முன், அவன் எதைச் செய்யவும் தனது நினைவுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதன் பொருட்டு அவன் ஒரு நல்ல கேட்பாளனாக இருக்க வேண்டியிருந்தது. நல்ல கேட்பாளர்களை உருவாக்கும் பொறுப்பு, நயம்பட கதைச் சொல்பவரை சார்ந்திருந்தது. எனவே, கதை சொல்லிகள் மக்களிடையே பெரும் மரியாதைக்குரியவர்களாக வலம்வந்தனர். நல்ல கதை சொல்லிகள் எப்போதும் தங்களது கதைகளின் வழியாக, பார்வையாளர்களை எளிதில் கவரக்கூடிய திறன் பெற்றிருந்தார்கள்.

இந்த மக்கள் பயணித்த இடங்களுக்கெல்லாம் இக்கதை சொல்லிகள் சொன்ன கதைகளும் கூடவே பயணித்தன. இவ்வாறாக ஒரு இடத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை, அக்கதையைக் கேட்பவரின் வாயிலாக, தூர தேசத்தில் உள்ளவர்களுக்கும் பரவத் தொடங்கின. மீண்டும் அவர்கள் தங்களுடைய வசிப்பிடங்களுக்குத் திரும்பும்போது, தாங்கள் பார்த்த அவ்விடத்தினைப் பற்றிய பல புதிய கதைகளையும் தங்களுடனே கொண்டு வந்தனர்.

அதே சமயம் இந்த ‘கதை சொல்லல்’ கலையின் வரலாறு, கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன என்பதை வெளிப்படுத்துகிறது. புராணக் கதைகள், தேவதைக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக்கதைகள், சாகசக் கதைகள், பேய் கதைகள், புனைவுக் கதைகள் என வெவ்வேறு பெயர்களைக் கொண்ட கதைகள், மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, புதுப்புது உருவங்கள் பெற்று மீண்டும் புதுப்புது கதைகளாக உருவாக்கம் பெறுகின்றன.

எவ்வாறாயினும், தலைமுறைகள் கடந்து நிற்கும் இக்கதைகள் நமது முன்னோர்களின் விவேகத்தையும், ‘கதை சொல்லல்’ உத்தியையும் நன்கு பிரதிபலிக்கின்றன. உண்மையில், இந்த ‘கதை சொல்லல்’ கலை மனித குலத்தை விவரிக்கவும், பிணைக்கவும் உதவும் கலை என பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களும், உளவியலாளர்களும் நம்புகின்றனர்.
ஆம்! உற்றுநோக்கின், இவ்வுலகில் வாழும் ஜீவராசிகளில் மனித இனத்திற்கு மட்டுமே கதைகளைப் புனையவும், கதை சொல்லிகளாக இருக்கவும் திறன் அமைந்திருக்கிறது.

error: Content is protected !!