ஜெ. நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த கண்ணீர் பேட்டி முழு விபரம்!

ஜெ. நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த கண்ணீர் பேட்டி முழு விபரம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து விட்ட சசிகலா தோற்றம், நடவடிக்கை எல்லாம் மாறிக் கொ/ண்டே வந்தது. அதன் ஒரு பகுதியாக போன வாரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக எம் எல் ஏக்க்க?ள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக, முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்தார்.ஆனால் கவர்னர் வித்யா சாகர் ராவ் சென்னையில் இல்லை என்பதால் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.கவர்னர் கேட்டுக் கொண்டதால் தொடர்ந்து அவர் முதல்- அமைச்சராக இருந்தாலும், கடந்த 2 நாட்களாக கோட்டைக்கு வரவில்லை. எந்த அரசு அலுவல்களையும் அவர் கவனிக்கவில்லை. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலேயே முடங்கி இருந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கும் செல்லவில்லை. செல்போனையும் ‘சுவிட்ச் ஆப்’ செய்து இருந்தார்.அரசு அதிகாரிகள் ஒரு சிலர் நேற்று அவரை சந்திக்க முயன்றபோதும், யாரையும் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை. கட்சி நிர்வாகிகளையும் பார்க் கவில்லை. தொடர்ந்து அவர் அமைதியை கடைபிடித்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ops feb 8

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார்.முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுவிடுவார் என்று அவருடன் வந்த பாதுகாவலர்கள் உள்பட அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் ஜெயலலிதா நினைவிடம் முன்பு உட்கார்ந்து கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டார். அவர் எதற்காக தியானத்தில் ஈடுபடுகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

சுமார் 40 நிமிடங்கள் அவர் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் தியானத்துக்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டனர். அப்போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்கத்தை அளித்தார்.

அம்மாவின் (ஜெயலலிதா) நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி என் மனசாட்சியை சாந்தப்படுத்திக்கொள்ள இங்கு வந்தேன். இங்கு வந்தபோது சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தேன். அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. அதன் விளைவாகத்தான் இங்கு வந்தேன். கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை கழக உடன்பிறப்புகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. அதனால்தான் இங்கு வந்தேன்.

புரட்சித்தலைவி அம்மா உடல்நிலை குன்றிய போது 70 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நீங்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்றும், கழகத்தின் பொதுச் செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அம்மா இருக்கும்போது எனக்கு என்ன அவசியம் வந்துவிட்டது என்று கேட்டு அழுது புலம்பினேன். முதல்வராக பொறுப்பேற்க மறுத்தேன்.அதற்கு அவர்கள், “தற்போது அசாதாரணமான சூழல் உள்ளது. எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது. ஏற்கெனவே 2 முறை அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட உங்களைச் சொன்னால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். வேறு ஒருவரை சுட்டிக் காட்டினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

aa 3

இக்கட்டான சூழல் இருந்தபோது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அம்மாவின் ஆட்சிக்கு சிறு களங்கம்கூட, அவப்பெயர் கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கண்ணும், கருத்துமாக இருந்து ஆட்சி செய்தேன்.

அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து, ‘நீங்கள் முதல்வராகி விட்டீர்கள். என் அக்காவை கூட்டிக்கொண்டு நான் ஊருக்குப் போகிறேன் என திவாகர் கூறினார்’ என தெரிவித்தார். நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு சின்னம்மாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்றார்.வார்தா புயல் நிவாரணப் பணியை மேற்கொண்டது, ஆந்திரா முதல்வருடன் பேசி குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது, ஜல்லிக்கட்டுக்காக பிரதமரை சந்தித்துப் பேசியது, சட்டம் கொண்டு வந்தது போன்ற செயல்களால் எனக்கு நல்ல பெயர் ஏற்பட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக நான் செயல்பட்டு வருகிறேன். ஆனால், வருவாய்த்துறை அமைச்சராக என்னால் நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்றார். இதை உடனடியாக பொதுச்செயலாளர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். சட்டப்பேரவை உறுப்பினர் குழு தலைவராக என்னை தேர்வு செய்து, என் பரிந்துரையில் வருவாய்த்துறை அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். என் அமைச்சரைவையில் இருப்பவரே இன்னொருவரை முதல்வராக வேண்டும் என பேட்டி அளித்தால் அது நீதிக்கும் நியாயத்துக்கும் தர்மத்துக்கு சரிதானா? ஆளுநர் கூப்பிட்டு பலத்தை நிரூபித்து காட்டுங்கள் என்றால் தேவையில்லாத பிரச்சினை வருமே என்று சொன்னேன். உதயகுமாரை கூப்பிட்டு கண்டித்துவிட்டோம். இனி யாரும் இப்படி பேசமாட்டார்கள் என்றார்கள்.

என் அறைக்கு வந்த கூட்டுறவுத்தறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உதயகுமார் பொறுப்பில்லாமல் பேட்டி அளித்தார் என கூறிவிட்டு, மதுரைக்கு சென்று அவரும் அதே போல் பேட்டியளிக்கிறார். அடுத்த நாள் நாடாளுமன்ற துணைத்தலைவரும் கடிதம் மூலம் அதையே வலியுறுத்தினார். செங்கோட்டையனும் அதே கருத்தை வலியுறுத்தினார். அதன்பின், சில அமைச் சர்களை எம்எல்ஏக்களை அழைத்து என்னை முதல்வராக அமர்த்திவிட்டு ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று சொன்னேன். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். தொண்டர்களும் அதிருப்தியிலும், வருத்தத்திலும் இருக்கி றார்கள் என்றேன்.

ஜெயலலிதா சோதனைகளைத் தாண்டி, உருவாக்கிய இந்த இயக்கத்தை 2011-ல் ஆட்ச்யை தந்து மீண்டும் 2016-ல் ஆட்சியை தந்துள்ளார்கள். பல்வேறு திட்டங்கள் மூலம், உலகத்தில் உள்ள மக்கள் பாராட்டுகின்றனர். நம்கையில் மிகப்பெரிய வலுவான கட்சியையும், ஆட்சியையும் தந்துள்ளார்கள். இதற்கு எந்த பங்கமும் வந்து விடாத வகையில் நம்மைப் போன்ற சீனியர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்றேன்.

என் மனநிலைமிகவும் பாதிக்கப்பட்டது. பலரிடம் கூறி வருத்தப்பட்டேன். பொறுமையாக காத்திருந்தேன். என்னால் கடுகளவு பங்கமும் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண் ணத்தில் அமைதியாக இருந்தேன். இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. எனக்கு தகவல் இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் தலைமைக் கழகத்தில் கையெழுத்து வாங்குவதாக தெரிவித்தனர். நான் எண்ணூரில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அதன் பின் போயஸ் தோட்ட இல்லம் சென்றேன்.

அங்கு மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள், சசிகலா குடும்பத்தினர் இருந்தனர். என்னை அமரச் சொன்னார்கள்.அப்போது சசிகலா முதல்வராக பொறுப்பேற்க அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்கள். அதற்கு இப்போது என்ன அவசியம் என்று கேட்டேன். பொதுச் செயலாளர், முதல்வர் ஆகிய இரண்டு பதவிகளும் ஒருவரிடம் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றார்கள். எம்.எல்.ஏ.க்கள் கூடியிருக்கிறார்கள். நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். இரண்டு மணி நேரம் விவாதம் நடைபெற்றது. என் தரப்பு வருத்தத்தைக் கூறியபோது யாரும் பேசவில்லை. என் கையைப் பிடித்துக் கொண்டு, கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும். நீங்கள் மறுத்தால், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகிவிடும்.எனவே, நீங்கள்தான் இப்போதும் செயல்பட வேண்டும் என்றார்கள். என்னைக் கட்டாயப்படுத்தி, சம்மதிக்க வைத்து, இக்கட்டான சூழலில் முடிவை எடுக்க வைத்தார்கள்.

aa 2

இதனை நாட்டு மக்களுக்கும், ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் தற்போது இங்கு வந்தேன். ஜெயலலிதாவின் ஆன்மாவும், தொண்டர்களிடம், மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. கட்சியின் ஒட்டுமொத்த செயல்வீரர்களும், ஒட்டுமொத்த மக்களும் விரும்பும் ஒருவர்தான் பொதுச் செயலாளராக, முதல்வராக வர வேண்டும். அது நானாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா ஆட்சியின் நல்ல பெயரைக் காப்பாற்றக் கூடிய ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும். இந்த கருத்தில் கடைசி வரை நான் உறுதியாக இருப்பேன். இதற்காக தன்னத்தனியாகக் கூட இருந்து போராடுவேன்” என்றார்

error: Content is protected !!