’மனிதநேய புகழ் சிறுவன்’ அப்துல்கலாம் குடும்பத்திற்கு வீடு வழங்கிய மு.க.ஸ்டாலின்!
சமீபத்தில் அப்துல்கலாம் என்ற பள்ளி சிறுவன் ஒருவன் இணையதளம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் மனித நேயம் குறித்து பேசியிருந்தது வைரலாகி இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.2.2022) தலைமைச் செயலகத்தில், மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாம் பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை வழங்கினார்.
இணையதளம் ஒன்றில் மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேசிய பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாமின் வீடியோ பலராலும் பகிரப்பட்டது. மாணவன் பேச்சு காரணமாக அவரது பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் பாராட்டப்பட்டனர். ஆனால் சிறுவன் பிரபலமடைந்ததால் அவரது குடும்பம் தங்கியிருந்த வீட்டை உரிமையாளர் காலி செய்ய வற்புறுத்தினார். இதனால் வேறு வீட்டுக்கு மாறினர். இச் சூழலில் கடந்த 24.2.2022 அன்று முதலமைச்சர் ஸ்டாலினை மாணவன் ஏ. அப்துல்கலாம் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அம்மாணவனின் பெற்றோர் தில்ஷாத்பேகம், அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தாங்கள் குடியிருந்த சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்து விட்டதாகவும், அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய பொருளாதார வசதியில்லை எனவும், எனவே குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அப்பெற்றோரின் வேண்டுகோளை பரிசீலித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை வழங்கினார்.
இந்நிலையில் சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு சென்னை கே.கே.நகரில் உள்ள சிவலிங்கபுரம் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டினை தமிழக அரசு வழங்கியுள்ளது. தான் போலீசாக ஆசைப்படுவதாகச் சிறுவன் அப்துல் காலம் தெரிவித்துள்ளான்.