முதியோர் ஓய்வுதியம் மணியார்டர் மூலமே வழங்கப்படும்! – எடப்பாடி அறிவிப்பு!

முதியோர் ஓய்வுதியம் மணியார்டர் மூலமே வழங்கப்படும்! – எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் 80 வயதை கடந்த 1 லட்சத்து 83 ஆயிரம் முதியோருக்கு பண அஞ்சல் மூலமாக வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு இன்று ஆணையிட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ”தமிழ் நாட்டில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரான 60 வயது கடந்தமுதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள், ஏழைவிவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் தற்போது மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.  தமிழ் நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் நாளது தேதியில் 29,48,527 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

தற்போதைய நடைமுறையின்படி, ஓய்வூதியத் தொகையானது வங்கிகளின் மூலம் பயனாளி களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பயனாளிகள் குடியிருக்கும் கிராமத்தில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகையினை பயோமெட்ரிக் கருவி மூலம் வழங்கி வருகின்றனர். இதற்கு சேவைக் கட்டணமாக பயனாளி ஒருவருக்கு ரூ.30 வீதம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பொது இடங்களில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுதல் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்ந்ததன் காரணத்தினால், அவர்கள் ஓய்வூதியம் பெறுதலில் சிரமங்களை தவிர்க்க, வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவரவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத் தொகையினை வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 23.4.2018 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 80 வயதினைக் கடந்து ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத் தொகையினை வழங்கும் முறையினை மீண்டும் அஞ்சல் துறை மூலம் கொண்டு வர அறிவுறுத்தினார்.

தமிழ் நாட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 80 வயதைக் கடந்த 1,83,308 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுரைகளின் படி வயது முதிர்ந்த இப்பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பணஅஞ்சல் மூலம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது”இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!