தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு!
ஒரு வழியாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வியாண்டில் இருந்தே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
தமிழகத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு பெற்றிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்தது. இந்த நிலையில், 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்தும் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் அனைத்துப் பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர் களையும் கட்டாயத் தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தேர்வும் நடத்த வேண்டும். அந்தத் தேர்விலும் மாணவர்கள் தோல்வி யடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை அமல்படுத்தின. இதற் கிடையே மத்திய அரசின் ஆணைப்படி, நடப்புல் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப்.13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதன் அடிப்படையில் தற்போது தேர்வு குழு, தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வுக்கால அட்டவணை அமைத்தல், தேர்வு முறை, வினாத்தாள் வடிவமைத்தல், வினாத்தாள் மதிப்பீடு ஆகியவற்றுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் இதற்கான தேர்வுக்குழு அமைக்கப்படும். 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள், பள்ளியில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்குள்ளும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு1 கி.மீ. தொலைவுக்குள்ளும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.