டிக் டாக் புகழ் இலக்கியா நீ சுடத்தான் வந்தியா’ பட இசைவெளியீட்டு விழா துளிகள்!

டிக் டாக் புகழ் இலக்கியா நீ சுடத்தான் வந்தியா’ பட இசைவெளியீட்டு விழா துளிகள்!

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும் போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன். பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன்.நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை .அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க வந்தேன்.படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார். இந்தப் படத்தை 5டி கேமராவில்தான் ஆரம்பித்தோம். பிறகு ரெட் டிராகன், ஏரி அலெக்ஸா வரை கேமராக்கள் பயன்படுத்தினோம். அந்தளவுக்கு பட்ஜெட் பெரியதாகி விட்டது. இப்படத்தை எடிட்டிங்கும் செய்து இயக்கியிருக்கிறார் அண்ணன் துரைராஜ், அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.இந்தப் படம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் திட்டத்தில் உள்ளது” என்றார்.

கதாநாயகியாக நடித்திருக்கும்’ டிக் டாக்’ புகழ் இலக்கியா பேசும்போது, ” இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும். உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன் .நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது .அனைவரும்இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் “என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும் போது, ” . ஒரு காலத்தில் எம்ஜிஆர் படங்களுக்கு சிவாஜி நடிக்கும் பெரிய படங்களுக்கு என் எஸ்.சி என்கிற செங்கற்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு என்ற இந்த மூன்று ஏரியாவும் சேர்ந்து 2 லட்சம் வியாபாரம் ஆகும். அனைவருக்கும் லாபம் கிடைக்கும் .இப்போது விஜய் நடிக்கும் படத்திற்கு செங்கல்பட்டு ஏரியா மட்டுமே 12 கோடி 18 கோடி என்கிறார்கள். தயாரிப்புச் செலவு அந்தளவுக்கு கூடி விட்டது சிறு படத்தயாரிப்பாளர் களை ஆதரிக்க வேண்டும். இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் . அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் “என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளை பாடலில் பார்த்தோம்.கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும் .ஏன் என்றால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் நன்றாக ஓடியது .அது மாதிரி சில படங்களும் ஓடின். அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான், பயந்தேன்,மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூட போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றி பெற்றுவிட்டது.அதேபோல் இந்த படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன .நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்திருப்பார்கள் .அனைத்து காட்சிகளும் ஒளிப்பதிவாளர்தான் பார்த்திருப்பார்.இந்தப் படம் ஓடிவிடும் கவலை வேண்டாம். “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று நாடே தேர்தல், கூட்டணி என்று பரபரப்பாக இருக்கின்ற நேரம் இது. இந்த நேரத்தில் இந்த பட விழா நடக்கிறது.இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பதாகச் சொன்னார். அவர் விருப்பப்பட்டு வரவில்லை.வேறு வழியில்லாமல் வந்திருப்பதாகத் தனது சூழ்நிலையைக் கூறினார். இன்று ஆளாளுக்கு கதாநாயகன் ஆகவேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். ஆசைப்படுபவர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது.

முன்பு குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது டிக்டாக்கில் இருந்து சினிமா வுக்கு வருகிறார்கள். இது ஒரு கால மாற்றம் தான். இலக்கியா டிக்டாக்கில் இருந்து வந்து இருக்கிறார். நாம் விதவிதமான உடைகள், உடுத்துகிறோம். ஆனால் எல்லாம் மானத்தை மறைப்தற்காகத்தான். அது போல பல வகையான படங்கள் எடுத்தாலும் சினிமா என்பது பொழுது போக்கிற்காகத் தான் .அது காதலைச் சொல்லலாம்,நகைச்சுவையைச் சொல்லலாம் ,அரசியல் பேசலாம், நல்ல கருத்துகளைச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் சினிமா பொழுதுபோக்கிற்காகத்தான். அதுபோல சினிமாவில் கவர்ச்சியும் ஓர் அங்கம். இந்த படத்தின் கவர்ச்சி வியாபாரத்துக்காக என்று புரிந்துகொள்ள முடிகிறது.என்று திரையரங்கில் வர வேண்டிய படம் ஓடிடியில் வெளியானதோ அன்றே சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் என்றாகிவிட்டது.

இவர் சினிமா தெரியாமல் படமெடுக்க வந்தாலும் இப்போது அனுபவத்தில் கற்றுக் கொண்டு இருப்பார். ஆனால் இன்றைக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் 90 சதவீதம் பேர் சினிமா எடுக்க வருகிறார்கள்.அவர்களுக்குச் சினிமா தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தான் இன்று படம் எடுக்கிறார்கள். சினிமா பொழுதுபோக்காக இருக்க வேண்டும். அரசியலில் பொறுப்புடன் இருக்க வேண்டும். இன்று பொழுதுபோக்கு நிறைந்த சினிமாவில் பொறுப்பு வந்துவிட்டது. இன்று அரசியல் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. ஆனால் நாம் பொறுப்பாக இருப்போம்.”என்றார்.

நிகழ்ச்சியில் பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத்தலைவர் பி.வி கதிரவன் பேசும்போது, “சினிமா என்பது ஒரு அற்புதமான சாதனம். தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் கூட சினிமா ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. சக்தி வாய்ந்த அந்த சாதனத்தில் எந்த செய்தியையும் எளிதாகச் சொல்லிவிட முடியும். நான் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.என் கல்லூரிக் காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய ‘புன்னகை’ படத்தை பார்த்தேன். கருத்துள்ள அந்தக் கதை இன்னும் நினைவில் இருக்கிறது .படத்தில் நல்ல கருத்தை வைத்துக்கொண்டு செலவில்லாமல் எடுத்திருப்பார். இப்படியெல்லாம் சினிமாவில் தான் உருவாக்க முடியும்.இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் தம்பி அருண்குமாருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் “என்றார்.

விழாவில் படத்தின் இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன், பாடகர் கானா சேது, பாடலாசிரியர் லோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!