தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…!!

தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்…!!

லக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிப்பெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

இத்தனைக்கும் எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். அப்பா சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது!

இன்றையக் காலக் கட்டத்தில் பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வாங்க? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கலை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை, பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை… போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை யெனில் பிடிவாதம் செய்வர். மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்.

இதைக் கவனத்தில் கொண்டு குழந்தைகள் தங்களுடைய பிடிவாத குணத்தையும் விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இப்படி, பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்றைக்கும் உலகம் புகழும் அறிஞராக _ பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்.

எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில் அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத் தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.

எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில் ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.

எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்.

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா? ஒரே நேரத்தில் நான் எந்த விசயத்தையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின் விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில் சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்தி விடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்-வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.

100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை.விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்-களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

இந்நிலையில் ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்பார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று முறையாக எதையும் கற்காமல், உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கையில் சாதனை படைத்த எடிசன் தன்னுடைய 84வது வயதில் iஇதே அக்டோபர் 18ல் (1931) மறைந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின்படி, அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!