’தீர்க்கதரிசி’ – விமர்சனம்!

’தீர்க்கதரிசி’  – விமர்சனம்!

ர்ம குரல் ஒன்றை மட்டுமே நம்பி உருவாக்கிய கதையொன்றில், தேவையான சுவாரஸ்யத்தைத் திரைக்கதையில் சேர்க்காமல், வெறும் பரபரப்பான படத்தொகுப்பை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார்கள்.

அதாவது காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், சிலருக்கு ஏற்பட இருக்கும் விபத்தை முன் கூட்டியே தெரிவித்து அவர்களை காப்பாற்றும்படி சொல்கிறார். ஆனால், அந்த சம்பவங்கள் பற்றிய சரியான தகவலை சொல்லாததால், அவர்களை காப்பாற்ற முடியாமல் போலீஸ் திணறுகிறது. அதே சமயம், காவல்துறைக்கு தகவல் அளிக்கும் அந்த நபர் ஊடகங்களுக்கும் அந்த தகவலை சொல்கிறார். இதனால், முகம் தெரியாத அவர் நடப்பதை முன் கூட்டியே அறியும் தீர்க்கதரிசியாக மக்களிடம் பிரபலமாகி விடுகிறார். அந்த நபர் யார்? அவர் சொல்லும் சம்பவங்கள் விபத்தா? அல்ல கொலையா? அவரை போலீஸ் பிடித்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

போலீஸ் ஆபீசர்களாக வரும் அஜ்மல், அவருக்கு இணையாக வரும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் ஆகிய மூவரும் சிரத்தையாக நடித்திருக்கிறார்கள். ஶ்ரீமனுக்கு இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அந்த வேடத்துக்கு முழு நியாயமாக நடித்திருக்கிறார்.ஒய்.ஜி.மகேந்திரன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் சத்யராஜ், சிறப்பான வரவேற்பைப் பெறுகிறார்.

கேமராமேன் லக்‌ஷ்மணனின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தில் வரும் இரவுக் காட்சிகள் மற்றும் லைவ் லொகேஷன்களை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.

ஜி.பாலசுப்பிரமணியத்தின் இசையில் காவலர்களுக்கு ஆதரவான பாடல் எடுபடவில்லை. ஆனால்பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. ரஞ்சித் சி.கே-வின் படத்தொகுப்பு காட்சிகளை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தொகுத்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் பி.சதிஷ்குமார் திரைக்கதை அமைக்க, பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டியன் இருவரும் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள். சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் கதையை சொல்லும் போது இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.. ஸ்காட்லாந்துயார்ட் -டுக்கு இணையாகப் பேசப்படும் சென்னை போலீஸை வைத்து உருவாக்கிய திரைகதையில் அழுத்தமில்லாததால் அவ்வப்போது சலிப்பைத் தருகிறது..மர்ம குரலோன் சொல்லும் சம்பவங்கள் மற்றும் அதனை நோக்கி பயணிக்கும் காவல்துறையின் ஏமாற்றம் போன்றவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றாலும், தொடர் விபத்துகளின் பின்னணியை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுவதும், இறுதியில் ஸ்ரீமன் அதை கண்டுபிடிப்பது போல் காட்டுவது மிகப்பெரிய லாஜிக் மீறலாக இருக்கிறது.

மொத்ததில் க்ரைம் திரில்லர் பாணியில் கொண்டு போய் ஆணவப்படுகொலைக்கு எதிராக நல்ல சமுதாய கருத்தை கூறி இருப்பது எடுப்பட்டுள்ளதால் பாஸ் மார்க் வாங்கி விடுகிறது

மார்க் 3/5

error: Content is protected !!