‘ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல!

‘ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல!

ஹின்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக அதானி குழுமம் பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஹின்டன்பர்க் தங்களது அறிக்கை தயாரிக்க இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை வைத்து பாஜக அபிமானிகள் பலர் நக்கல் அடித்திருந்தார்கள். ‘அதானி ஆபீஸ் டீ, பக்கோடா செலவை கணக்கிடவே ரெண்டு வருஷம் போதாதே?’ என்று ஒருவர் கலாய்த்திருந்தார். ஆனால் 412 பக்கங்கள் கொண்ட தங்கள் பதில் அறிக்கையை அதானி குழுமம் மூன்று நாட்களில் தயாரித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதானி finance டிபார்ட்மெண்ட்டில் சிட்டி ரோபோ வேலை செய்கிறார் என்று நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் திங்கள் காலை பங்குச் சந்தை திறப்பதற்குள் பதில் அறிக்கை வெளியிட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. இல்லையேல் இன்றும் ரத்தக் களரி தொடர்ந்திருக்கும்.

அந்த அறிக்கையை நான் படிக்கவில்லை. இருக்கிற வேலை பளுவை வைத்துப் பார்த்தால் படிக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அதன் ஆரம்பம் பெரிய அளவில் நம்பிக்கையை தரவில்லை. ‘The truth of the matter is that Hindenburg is an unethical short seller,’ என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். இது குறித்துதான் நான் நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஸ்ரீதரின் பதிவுகளுக்கு ‘போடா மொட்டை!’ என்பது எப்படி பதிலாகாதோ அப்படிதான் இதுவும். அவர்கள் short-seller என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தானே? ‘நாங்கள் ஒரு சேவை நிறுவனம். அன்னை தெரசா குழுமத்துடன் இணைந்து இயங்கி வருகிறோம்,’ என்று ஹின்டன்பர்க் என்றைக்காவது சொல்லி இருக்கிறார்களா என்ன?  அப்புறம், அடுத்ததுதான் ஹைலைட்:

‘This is not merely an unwarranted attack on any specific company, but a calculated attack on India, the independence, integrity and quality of Indian institutions, and the growth story and ambition of India.’
அதாவது ‘ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இந்தியாவின் மீது, அதன் சுதந்திரத்தின், அதன் நேர்மையின், இந்திய நிறுவனங்களின் தரத்தின் மீதான தாக்குதல். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஆதர்சங்களின் மீதான தாக்குதல்!’

பிரிட்டிஷ் அறிஞர் சாமுவேல் ஜான்சன் ஒருமுறை ‘அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி!’ என்று குறிப்பிட்டு இருந்தார். இங்கே பார்த்தால் இவர்களின் முதல் புகலிடமே அதுவாகத்தான் இருக்கிறது. ஹின்டன்பர்க் அறிக்கையில் இந்தியா பற்றியோ பொதுவாக இந்தியர்களின் நேர்மை, நாணயம் பற்றியோ ஒரு வரி கூட இல்லை. கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு ‘தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி’ என்று பாட்டுப் பாடுவது எதற்கு?

இந்த அறிக்கையிலும் ‘சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்று இருக்கிறது. மூன்று நாட்களாக வடிவேலு மாதிரி ‘என் ஏரியாவுக்கு வாடா’, ‘என் தெருவுக்கு வாடா’, ‘என் வீட்டுக்கு வாடா’ என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய எதுவும் செய்யக் காணோம்.

அது ஒரு புறம் இருக்க, ஓரிரு நாட்களிலேயே 400 பக்க அறிக்கையை தயாரிக்க முடிந்திருக்கலாம். ஆனால் அதனை படித்துப் பரிசீலிக்க துறை நிபுணர்கள் சில நாட்கள் எடுக்குக் கொள்வார்கள் என்று கணிக்கிறேன். அதற்குப் பின் அந்த அறிக்கையின் தரம் குறித்த விபரங்கள் வெளிவரலாம்.
காத்திருப்போம்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!