அந்த நாள் ஞாபகம்! – பிரணாப் முகர்ஜி அனுபவக் குறிப்புகள்!

அந்த நாள் ஞாபகம்! – பிரணாப் முகர்ஜி அனுபவக் குறிப்புகள்!

நாட்டின் முதல் குடிமகனாக – அதாவது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டு கால கட்டத்தில் அவர் பற்றி நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சொல்வதற்கு அதிகம் இல்லை என்பதே உண்மை .ஜனாதிபதியாக இருந்த போது இரண்டு பிரதமர்களைக் கண்டவர் பிரணாப். இருவரோடும் சுமுகமான உறவையே அவர் கொண்டிருந்தார். நாட்டின் சுப்ரீம் பவரான ஜனாதிபதி என்பவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்; மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டிருக்க வேண்டியவர். இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது காங்கிரஸோ பாஜகவோ மக்கள் நலனைப் பாதிக்கும்படியிலான திட்டங்களைக் கொண்டுவரும்போது பிரணாப் அவற்றுக்குப் பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது இன்றளவும் அவரின் பிராகரச் ரிப்போட்டில் மைனஸ் கிரேட்தான்.

ஆனாலும் ஐந்து முறை மாநிலங்களவைக்கும் இரண்டு முறை மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப், 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் தொழில்துறை, வணிகம், நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளை மிகவும் திறம்பட நிர்வகித்த பிரணாப் முகர்ஜி, எதிர்க் கட்சியினராலும் மதிக்கப்பட்டவர். அபார நினைவாற்றல், கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து வைக்கும் ஆற்றல், தலைமையிடம் விசுவாசம் ஆகிய பண்புகளால் கட்சித் தலைமையால் எப்போதும் உதவிக்கு அழைக் கப்பட்டவர். இதுவரை பத்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வரலாறு, அரசியல் அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற பிரணாப் முகர்ஜி சட்டப் பட்டமும் பெற்றவர். சிறிது காலம் அரசு ஊழியராகவும் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். சிறப்பாகத் தேர்தல் பணிபுரிந்ததால் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தது, அவரால் தேசிய அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர் பிரணாப் முகர்ஜி. நெருக்கடிநிலைக் காலத்தில் நடந்த அதிகார துஷ்பிரயோகத்தில் பிரணாபுக்கும் பங்கு உண்டு என்று குற்றம்சாட்டப் பட்டது. ஆனால், ஆதாரபூர்வமாக நிரூபிக்க ஏதும் இல்லை என்று கூறி, குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இங்ஙனம் பல்வேறு ஆளுமைகளின் நட்பும் தாக்கமும் கொண்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் , 1996–2012 கூட்டணி ஆட்சியின் காலங்கள் என்ற புத்தகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பிரணாப் தனது அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

அதில் இருந்து சில விஷயங்கள்;

1988 பஞ்ச்மாரி மாநாட்டுக்கு பிறகு சோனியா என்னை அடிக்கடி கலந்து ஆலோசித்தார். முன்பு இருந்த இடைவெளி குறைந்து என்னுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார். பரஸ்பரம் இருவரும் மதிப்பு அளித்தோம். யாரையும் சாராமல் தனித்துவமாக முடிவு எடுக்கிற சோனியாவின் இந்த குணம் தான் அவரது மிகப்பெரிய பலம் ஆகும். இந்திய அரசியல் வரலாற்றில் இன்னொரு முக்கியமான பரிமாணம் ஆகும். மக்களை அவர் அணுகுவது, அவரை தலைவராக மக்கள் ஏற்றுக்கொண்டதே இந்தியாவின் அடுத்த பிரதமராகும் முக்கியமான தகுதியை அவர் பெற்று விட்டார். அவர் பிரதமராகி இருந்தால் இதர தேவையான தகுதிகள் அனைத்தும் அவர் பெற்றிருப்பார்.

2004 தேர்தலில் காங். வெற்றிக்கு பிறகு சோனியா தான் பிரதமர் என்று எதிர்பார்த்த போது அவர் மறுத்து விட்டார். அடுத்ததாக என்னைத்தான் பிரதமர் ஆக்குவார் என்று பொதுவான எதிர்பார்ப்பு இருந்தது. அரசு நிர்வாகத்தில் அதிகமான அனுபவம் கொண்டவர் என்பதால் அப்படி கருத்து இருந்தது. அதே சமயத்தில் மன்மோகன்சிங் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நீண்ட அனுபவம் வாய்ந்தவர். நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர் என்ற அனுபவம் அவரை பிரதமர் ஆக்கியது. என்னை விட ஜூனியரான மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் நான் இடம் பெற மாட்டேன் என்று ஊடகங்கள் எழுதின.
அமைச்சரவையில் இடம் பெற விரும்பவில்லை என்று சோனியாவிடம் தெரிவித்தேன். கண்டிப்பாக நான் இடம் பெறவேண்டும் என்று சோனியா வற்புறுத்தினார். சிங்குக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். அதன்பிறகே சம்மதித்தேன். சிங்கும் எல்லா முக்கிய விஷயங்களிலும் என்னை கலந்து ஆலோசித்தார். என்னை சார்ந்தே அவர் இருப்பதாக தோன்றியது. நாங்கள் இருவரும் நல்லுறவை பகிர்ந்து கொண்டோம். மன்மோகன்சிங்கை விட பொருளாதார கொள்கை உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்தவர் இருக்க முடியாது. எனவே பிரதமர் பதவிக்கு என்னை விட தகுதியானவர் என்பதே என் கருத்து.

இலாகா பற்றிய விவாதம் வந்த போது நான்கு முக்கியமான இலாகாக்களில் எதை நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள் என்று கேட்டார். நான் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே சோனியாவின் விருப்பம். ஆனால் பிரதமரின் பொருளாதார கொள்கையில் நான் கருத்து வேறுபாடு கொண்டவன் என்பதால் நிதி அமைச்சகம் வேண்டாம் என்றேன். உள்துறை அமைச்சராக இருக்கிறேன் என்றேன். ராணுவ இலாகாவில் எனக்கு அனுபவம் கிடையாது என்று கூறினேன். பதவி ஏற்கும் போது தான் ராணுவ அமைச்சராக நான் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். ராணுவ அமைச்சர் பொறுப்பேற்றவுடன், பாதுகாப்பு தேவைகளுக்கு ரஷ்யாவையே இந்தியா சார்ந்திருப்பதை குறைத்தேன். அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடுகளை குறைத்துக் கொண்டு நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டோம்.

2012 ஜூன் 2ம் தேதி ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் பற்றிய விவாதம் நடந்தது. அதில் நானும் பங்கேற்றேன். அப்போது சோனியா குறுக்கிட்டு, பிரணாப்ஜி… நீங்கள் தான் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர். அரசின் செயல்பாட்டில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். உங்களுக்கு மாற்றாக யாரை நியமிக்கலாம் என்று கேட்டார். மேடம்.. நான் காங்கிரஸ்காரன். கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதே என் வாழ்நாளில் கடைப்பிடித்து வருகிறேன். எனவே எந்த பொறுப்பை எனக்கு வழங்கினாலும் அதை அக்கறையுடன் கவனிப்பேன் என்றேன். எனது நிலைப்பாட்டை சோனியா பாராட்டினார். அதன் பிறகு அமைச்சரவையிலும், கட்சியிலும் கலந்து ஆலோசித்து எனது பெயரே ஜனாதிபதி பதவிக்கு உறுதி செய்யப்பட்டு நானும் தேர்வு செய்யப்பட்டேன். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

Related Posts

error: Content is protected !!