தாய்லாந்து சிறுவர்கள் சில நாட்கள் துறவு நிலையை மேற்கொள்ள முடிவு!
தாய்லாந்தின் சியாங் ராய் என்ற பகுதிக்கு சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர், சமீபத்தில் சுற்றுலா சென்றனர்.பல கி.மீ., நீளம் உடைய குகைக்குள் அவர்கள் சென்றபோது, பலத்த மழை கொட்டியது. குகைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், குகையை விட்டு வெளியேற முடியாமல் உள்ளுக்குள் சிக்கினர். இவர்களை மீட்க பல்வேறு முயற்சி செய்தும், மீட்புப் பணி தோல்வி அடைந்தது.

இதையடுத்து, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். கடும் முயற்சியை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பின் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுவர்கள் அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அங்குள்ள புத்த கோவிலில் நேற்று கூடினர். தங்கள் தலையை மொட்டையடித்து புத்த துறவிக்கான ஆடை அணிந்தனர். தங்களை மீட்டதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக சில நாட்கள் துறவு நிலையை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் அறிவித்தனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், சிறுவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.