சென்னை உள்பட தமிழகமெங்கும் டீ கடை திறக்க முதல்வர் உத்தரவு!

சென்னை உள்பட தமிழகமெங்கும் டீ கடை  திறக்க முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6535 சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 279 , இந்நிலையில் தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் (மே 11ம் தேதி முதல்) காய்கறிகள், மளிகைக் கடைகள், தேனீர் கடைகள், பெட்ரோல் பம்புகள் திறக்க (கொரோனா வைரஸ் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில், (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல்வேறு வரைமுறைகளுடன் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ:

மே 11ஆம் தேதி முதல், காய்கறிகள், மளிகைக் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

காய்கறிகள், மளிகைக் கடைகள் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் கொரோனா வைரஸ் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் தேனீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும்.

தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

டீ கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.

சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

அனைத்து தனியார் நிறுவனங்கள்

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு, பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவது, விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பது ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும்.

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!