தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய தீர்மானம் : தமிழ்நாடு கவர்னர் திருப்பி அனுப்பிட்டார்!.
தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விளக்கியுள்ளதாக கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு மாறாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.’
நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த நீட் தேர்வுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.ஆனால் நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி தமிழக சட்டசபையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் இதுநாள் வரை கவர்னர் தரப்பில் இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கவர்னரை ஒரு சில முறை சந்தித்துள்ளார். மேலும் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திதக்க சென்ற தமிழக அமைச்சர்களை அவர் சந்திக்க நேரம் ஒதுக்காகது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, நீட் விலக்கு மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் பல கடந்தாலும் இது குறித்து கவர்னர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய நிலையில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படுவதாக கவர்னர் மாளிகை தகவல் அளித்துள்ளது.
மேலும் இந்த மசோதா தமிழக சபாநாயகருக்கே அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதா திருப்பி அனுப்பப்படுவதற்காக காரணத்தை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தமிழக அரசுக்கு விளக்கியுள்ளதாக கூறியுள்ளது. அதாவது நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக உள்ளது என்று ஆளுனர் தரப்பு தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னரின் இந்த முடிவு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.