முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம்!- தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு!
“கடந்த 4, 5 வாரங்களாக 40, 50 கீழ் பதிவான காரணத்தினால் மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என மக்கள் தவறாக நினைக்கின்றனர். மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்ற கருத்தை தமிழக அரசு வெளியிடவில்லை” என்று நேற்று மீடியாக்களிடம் சொன்ன மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று “பொது இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “. பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டங்களில் சென்று வந்துள்ளனர். கோவிட் அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை. தற்போது 14 ஆயிரம் பரிசோதனை நடக்கும் நிலையில், 18 ஆயிரம், 25 ஆயிரம் என படிப்படியாக அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஆர்டிபிசிஆர் பரிசோதனையையும் அதிகரிக்கப்படும்.
தமிழகத்தில் ஒமைக்ரான் எக்ஸ்இ பரவல் இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வு மட்டும் போதாது. பழக்கங்களில் மாற்றம் வர வேண்டும். கோவிட் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பதற்றப்பட வேண்டியது இல்லை. மாஸ்க் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது போன்வற்றை பின்பற்ற வேண்டும். இதனை பின்பற்றவில்லை என்றால், டில்லி போன்ற சூழ்நிலை உருவாகும். அதனால் பொது மக்கள் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும். தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் வசூலிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவையில்லை என மத்திய அரசே கூறியுள்ளது. சென்னை ஐஐடியில் கரோனா உறுதியான மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளது ” என்று தெரிவித்தார்.