March 21, 2023

கேட்டவருக்கெல்லாம் இ-பாஸ் – முதல்வர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இச்சூழலில் முக்கிய பணிகளுக்கு வெளியே செல்வோருக்கு மட்டும் இ-பாஸ் வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. கூடவே , இந்த இ-பாஸ் பெறுவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு வைத்திருந்தது. இதன்காரணமாக, பலரால் இ-பாஸ் பெற முடியவில்லை என்று கூறப்பட்டது. இதுமட்டுமின்றி, இ-பாஸ் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்தால் ஆகஸ்ட் 17 ம்தேதி முதல் உடனடியாக இ-பாஸ் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியி்ட்ட அறிக்கை

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், தமிழக சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பை யும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் (E-Pass) விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) ஆகஸ்ட் 17.ம்தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.