ஸ்டண்ட் யூனியன் பொன் விழாவையொட்டி பிரமாண்ட கலை நிகழ்ச்சி!

ஸ்டண்ட் யூனியன் பொன் விழாவையொட்டி பிரமாண்ட கலை நிகழ்ச்சி!

ஸ்டண்ட் யூனியனின் பொன் விழாவையொட்டி பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிக்கு ஸ்டண்ட் யூனியன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து, ஸ்டண்ட் யூனியன் தலைவர் அனல் அரசு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து கூறும்போது, “சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத் தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. கூட்டுக் குடும்பமாக உழைத்துத்தான் ஒரு படம் திரைக்கு வருகிறது. அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட எங்கள் யூனியன் பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். இந்த யூனியனின் வளர்ச்சிக்கு இன்றும் எங்களோடு இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்..

இன்று எங்களோடு இல்லாவிட்டாலும் யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்து விட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாக நாங்கள் 50-ஐ கடந்திருக்கிறோம். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பொன்விழாவை ஆகஸ்ட் 26 ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாகக் கொண்டாட இருக்கிறோம்.

நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் இணைந்திருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள் இழப்பைப் பற்றியும் எல்லா நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும். அதனால் எல்லோரையும் நேரிடையாக அழைக்க உள்ளோம்.

எங்களுடைய அழைப்புக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம். விழாவில் மூத்த உறுப்பினர்களை கெளரவப் படுத்த உள்ளோம். சுமார் 6 மணி நேரம் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மற்றும் எங்கள் ஸ்டண்ட் கலைஞர்களின் ஸ்டண்ட் காட்சிகளும் நடைபெறும்.

கலா மாஸ்டரின் குழுவினரின் பங்களிப்போடு பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த ஷோ இயக்குனராக மானாட மயிலாட புகழ் கோகுல் நாத் இருக்கிறார். பொன்விழா குழு தலைவராக ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் எங்களோடு இருப்பது எங்களுக்கு ரொம்பவும் பெருமை.” என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!