தென் மேற்கு பருவ மழை மேலும் தாமதமாகுது!
முன்னர் சொன்னதில் இருந்து இரண்டு நாட்கள் கழித்து அதாவது வரும் 8-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
இந்தியாவில் பொழியும் 70 சதவீத மழை தென்மேற்கு பருவ மழை காலத்தில் தான் பெய்கிறது. அதன் மூலமே நம் நாட்டின் நீர் தேவை நிறைவேறுகிறது. இந்நிலையில் கேரளாவில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜூன் 6-ஆம் தேதி மழை தொடங்க வாய்ப்புள்ள தாகவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.
ஆனால், பருவ மழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது கேரளாவில் வருகிற 8-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கையில்., தென்மேற்கு பருவமழை தற்போது மாலத்தீவுகள், குமரி கடல் பகுதிகள் தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மிதமாக காணப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அறிகுறிகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 5 நாட்களில் அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடக்கத்தின் போது வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகளுக்கு சாதகமானதாக அமையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் வரும் 3 அல்லது 4 நாட்களுக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் வெளியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.