பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியே ! சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!

பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியே ! சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!

2016 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியே என்று, சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பை நீக்கி உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பின் சாராம்சம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் முழுமையான தீர்ப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் இனிமேல் செல்லாது என அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஒரே இரவில் பல கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அதனால் அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக 58 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஐந்து நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் பி.ஆர்.காவை, பி.வி. நாகரத்னா, ஏ.எஸ் போபன்னா, மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்த அமர்வு நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறைக்கு முன்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதியில் வாதங்கள் அனைத்தையும் கேட்டு விட்டு, தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்துள்ளது. அதேவேளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்த ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார். அதில், ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகளின் படி ஒன்றிய அரசு முடிவெடுக்க முடியாது என்றும் பணமதிப்பை நீக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன். இந்த நடவடிக்கையில் ரகசியம் தேவை என்று அரசு கருதியிருந்தால், அதற்காக அவசர சட்டம் கொண்டு வந்திருக்கலாமே? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் எந்த பரிசீலனையும் இல்லாமல் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கி விமர்சனம் செய்துள்ளார்.

error: Content is protected !!