கோர்ட்டில் வீடியோ கேமரா! – சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லியை சேர்ந்த ஒருவர், ’கோர்ட் வளாகத்தில் நடக்கவிருந்த எனது திருமணம் தடைபட்டது. கோர்ட்டில் வீடியோ கேமரா பொருத்தி இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும்’என்றும் ’எனவே கோர்ட் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வீடியோ கேமரா பொருத்த வேண்டும்’எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அவரது மனு நீதிபதி ஏ.கே.கோயல் மற்றும் நீதிபதி லலித் ஆகியோர் கொண்ட அமர்வு பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அறிந்து கொள்ள கோர்ட் நடவடிக்கைகளை ஆடியோ இன்றி வீடியோ பதிவு செய்து கொள்ள கோர்ட்டுக்குள் சிசிடிவி காமிராக்களை பொருத்தலாம். கோர்ட் வளாகத்தில் சில முக்கியமான இடங்களிலும் வீடியோ காமிராக்களை பொருத்திக் கொள்ளலாம். வீடியோ கேமரா பொருத்தும் பணிகளை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலம்,யூனியன் பிரதேசத்தில் 2 மாவட்டங்களில் கோர்ட்களில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நீதிபதி அறையில்தான் கண்காணிக்கவேண்டும். எந்தெந்த மாவட்டம் மற்றும் இதர விவகாரம் பற்றி ஐகோர்ட்டுகள் தீர்மானிக்கும். இந்த சிசிடிவி காமிராக்களின் பதிவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஐகோர்ட் உத்தரவின்றி யாருக்கும் வழங்கக்கூடாது”இவ்வாறு உத்தரவு பிறப்பித்தனர்.