இதுவரை தமிழில் வராத ஒரு விஷயம்தான் ‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சி. பேச்சு!

இதுவரை தமிழில் வராத ஒரு விஷயம்தான் ‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சி. பேச்சு!

யக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’ இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேலும் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும் போதும் இங்கு வந்திருக்கிறார் .எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர். முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர். அவர் இங்கே வந்திருப்பது அந்த நம்பிக்கையே இங்கு வந்திருப்பதாக நினைக்கிறேன். எப்போதும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் “சூப்பர் சார் “என்பார். அவரது படம் நாளை வெளியாக இருக்கிறது .அந்த பரபரப்பான நிலையில் இங்கே வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் .அவர் ஒரு இயக்குநராக நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் .அவரிடம் இந்தக் கதையை சொல்லி நான் விவரித்தபோது ,”அதெல்லாம் விரிவாக பேச வேண்டாம்.நான் உங்கள் படத்தில் இருக்கிறேன்” என்று சொன்னார் . அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.

பருத்திவீரன் சரவணனிடம் இந்தப் படத்தின் பாத்திரத்தைப் பற்றி விவரித்த போது அவர் பயந்தார். என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார்.அவர் ஏற்கவில்லை . பொதுவாக எல்லா படங்களிலும் கதாநாயகனைத் தான் சக்தி மிக்கவர்களாகக் காட்டுவார்கள்.ஆனால் இந்தப்படத்தில் வில்லனைச் சக்தி மிக்கவனாகக் காட்டுகிறேன். அந்தப் பாத்திரத்தைப் பற்றிப் புரிந்து கொண்டதும் பிறகு ஒருவழியாக ஒப்புக்கொண்டார். டப்பிங் பேசி விட்டு ‘என்னைப் பார்க்க எனக்கே பயமாக இருக்கிறது “என்றார்.

கதாநாயகிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை .நடித்து விடுவதோடு சரி. இந்த டப்பிங் பேசவோ ப்ரமோஷன் செய்யவோ வரமாட்டார்கள். அதுதான் அவர்களது போக்காக இருக்கிறது. ஆனால் என்னுடைய கதாநாயகிகள் இனியாவும் சரி சாக்ஷி அகர்வாலும் சரி அப்படிப்பட்டவர்கள் அல்ல.நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இந்தப் படத்தின் விழா என்று சொன்னதும் ‘அடுத்த படத்தின் படப்பிடிப்பை இங்கேயே தொடங்கி விடலாமா?’ என்று சாக்ஷி அகர்வால் கேட்டார். அப்படிப்பட்டவர்கள்தான் என் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

‘இந்தப் படத்தில் இதுவரை தமிழில் வராத விஷயத்தை நான் சொல்லியிருக்கிறேன். சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை ,தீயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது.அது கேட்கப் படுகிறதா இல்லையா என்பதுதான் கதை. இங்கே இயக்குநர்கள் இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் .உண்மைகளைப் பேச வேண்டும் ,அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தயங்கக் கூடாது .நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன் ,தைரியமாக உண்மையைப் பேசுங்கள். தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள் .எல்லா இயக்குநர்களும் தைரியமாக இருக்க வேண்டும். சமூக சிந்தனையுடன் இருக்க வேண்டும். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் மனிதராக இருக்க வேண்டும். சமுத்திரக்கனி ஒரு நல்ல மனிதராக இருப்பவர். என்னைப்போலவே சமூகக் கோபம் கொண்டவர்.மனித நேயம் மிக்கவர், பணமெல்லாம் அதற்குப்பிறகுதான் என்று இருப்பவர் .இப்படத்தின் மூலம் நல்ல மனிதர்களுடன் பயணம் செய்த உணர்வு எனக்கு உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன் விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று .விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன் .ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் சிலர் யாரோ உட்கார்ந்து கொண்டு விஜயின் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம். பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டி தான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள். மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் .பொய் சொல்லாதீர்கள் . தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசாதீர்கள். உடனே அப்பா பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம் எங்களுக்குள் சண்டைதான். இது எல்லா குடும்பத்திலும் நடப்பது தான் .குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானதுதான்.

விஜய் ரகசியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள் .விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் .இதைப் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய் வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நல்ல மேடை நல்லதைச் சொல்வோம் .அன்பை விதைப்போம் .அன்பை அறுவடை செய்வோம்” இவ்வாறு இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.

முன்னதாக டீஸரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். படத்தின் ட்ரெய்லரைத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வெளியிடbதயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!