March 22, 2023

சபரிமலை கோயில் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. கோயில் களில் பூஜைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்த 8-ம் தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை அடுத்து, மிதுன பூஜையை யொட்டி சபரிமலை கோயில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. தினமும் காலை 4 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவில் நடை திறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், வரும் 14-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. 19-ம் தேதி வரை மிதுனம் மாத பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கொரோனா பரவலாம் என்பதால் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார்.