சபரிமலை கோயில் பெயரை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் -னு மாத்திட்டாங்கஃ
கேரளாவில் மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் பல ஐயப்பன் கோயில்கள் உள்ளன. சபரிமலை, அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம் பேட்டை கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. தர்மசாஸ்தாவின் ஆஸ்ரமநிலைக்கு ஏற்ப இக்கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குளத்துப்புழையில் பாலனாகவும், ஆரியங்காவில் இளைஞராக புஷ்கலாவுடனும், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராகவும், சபரிமலையில் துறவியாகவும் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். கேரளநாட்டை உருவாக்கிய பரசுராமர் இக்கோயில்களை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைகளுக்கு முந்தைய நாள், பக்தர்கள் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நாளில் ஆயிரம் குடம் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு சகஸ்ர கலசாபிஷேகம் என்று பெயர். ஒவ்வொரு மாதமும் இந்த அபிஷேகம் நடக்கும். இந்த பூஜையின் போது பலமுறை நடைதிறக்கவும், மூடவும் வேண்டி இருப்பதால் பக்தர்கள் வராத நாளை தேர்ந்தெடுத்து இந்த அபிஷேகத்தை நடத்துகிறார்கள். மதியவேளையில் இந்த அபிஷேகம் நடத்தப்படும். ஐயப்ப சுவாமியின் தெய்வீக அருளை அதிகப்படுத்துவதற்காக இவ்வாறு செய்கின்றனர். இந்த அபிஷேகம் நடத்த 3 மணி நேரமாகும்.
ஐயப்பனுக்கு எளிய உணவு: சபரிமலை தர்மசாஸ்தாவான ஐயப்பன் கோயில் நடை திறக்கும் நாட்களில் அவருக்கு செய்யப்படும் பூஜை, எளிய உணவு வகைகளைத் தெரிந்து கொள்வோமா! காலை 4மணிக்கு நடைதிறக்கப்பட்டதும், பிரதான புரோகிதரான தந்திரி முதலில் அபிஷேகம் செய்வார். பின்னர் கணபதிஹோமம் நடக்கும். கணபதி, நாகராஜாவுக்கு பாயாசம் படைக்கப்படும். பிரசன்னபூஜை முடிந்தபின் தீபாராதனை நடக்கும். மதியம் 12மணிவரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படும். 25 கலசங்களைக் கொண்டு தந்திரி மத்தியான பூஜை செய்வார். அரவணை பாயாசம் படைக்கப்பட்டு நடை சாத்தப்படும். மாலை 4மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடக்கும். இரவு 10மணிக்கு நெய் அப்பமும், பானகமும் ஐயப்ப சுவாமிக்கு படைக்கப்படும். மீண்டும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். இந்த சமயத்தில் ஐயப்பசுவாமி உறங்கச் செல்வதாக ஐதீகம். அப்போது உலகப்புகழ்பெற்ற பாடலான ஹரிவராசனம் பாடுவர்.
இப்பேர்பட்ட சபரிமலைக்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுவதும் இருமுடி கட்டி வந்து ஐய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். தற்போது மண்டல பூஜைக்காக கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து தை மாதம் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.
இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளாக சபரிமலை என்றே அழைக்கப்பட்டு வந்த இந்த கோவிலின் பெயரை தற்போது சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் என பெயர் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பல தர்மசாஸ்தா கோயில்கள் கேரள தேவசம் போர்டின் கீழ் செயல்பட்டு வந்தாலும் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி சபரிமலையில் தான் புனிததன்மையோடு பிரத்யேகமாக வீற்றிருப்பதால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளது.கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது