பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ பட புரொமோஷன் பிரஸ் மீட்!

பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ பட புரொமோஷன் பிரஸ் மீட்!

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாஹோ’. இரண்டரை ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது படக்குழு. தமிழில் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இயக்குநர் சுஜித், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், இசை அமைப்பாளர் ஜிப்ரான், அருண் விஜய், கலை இயக்குநர் சாபுசிரில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் பிரபாஸ் பேசியது

சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். ‘சாஹோ’ படத்துக்காக 2 வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகுபலி படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது, தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார்கள். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். அதற்காக நேரம் கொடுக்க வேண்டும்.  அபுதாபி, இத்தாலி, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பா நாடுகளிலும் படப்பிடிப்பு செய்துள்ளோம். இங்குத் தான் பிறந்தேன். ஆகையால் நேரடி தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளது. கூடிய சீக்கிரம் நடக்கும்.

அருண் விஜய் பேசியது:

இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். பெருமைப்படக் கூடிய படைப்பில் நானும் இருக்கிறேன். சுஜித் சார் என்னிடம் கதை சொல்லும் போதே ‘இந்தக் கேரக்டர் நீங்க பண்ணீங்கன்னா நல்லாயிருக்கும் என்று பிரபாஸ் அண்ணா சொன்னார்’ எனக் கூறினார். அப்போதே இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என முடிவு பண்ணினேன்.
‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன். முதல் முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளேன். சுஜித் பார்க்க ரொம்ப சிம்பிளாக இருப்பார். ஆனால், நிறைய நடிகர்கள், படப்பிடிப்பு தளங்களைக் கையாளக்கூடிய விதம் சிறப்பாக இருக்கும். அதற்கு நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் இந்தப் படத்தைக் கொடுத்ததிற்கு நன்றி. 2. 5 படங்கள் கழித்து வரக்கூடிய படம் என்பதால் எப்படியிருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் ரொம்ப தெளிவாக இருந்தார். பாகுபலிக்கு பிறகு நிறைய பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியிருக்கலாம். அடுத்தக் கட்டம் எப்படி என்பதில் ரொம்ப தெளிவாக இருந்து இருக்கிறார். பிரபாஸ் உடன் பணிபுரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப எளிமையான மனிதர். இந்தப் படத்தின் லுக்கை வைத்துக் கொண்டே ‘செக்கச்சிவந்த வானம்’ மற்றும் ‘தடம்’ படங்களில் நடித்தேன். ஏனென்றால் இதில் ஒப்பந்தமாகி விட்டதால் என்னால் லுக்கை மாற்ற இயலவில்லை. அனைவருமே பெருமைப்படக் கூடிய படமாக இருக்கும்.

ஷ்ரத்தா கபூர் பேசியது :

இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ஓகே கண்மணி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அருவி என்ற படம் பார்த்தேன். எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த படத்துக்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும் இதுவொரு மும்மொழி திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியை பிடிக்கும்போது அவை மிகவும் நடுங்கும். படத்தில் தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாக செய்துள்ளேன்.

error: Content is protected !!