கூகுளுடன் இணைந்து மலிவு விலையில் ஸ்மார்ட்போன்!- ஜியோ அறிவிப்பு!
இந்தியா மொபைல் வரலாற்றில் மலிவான விலைக்கொண்ட 4 ஜி ஸ்மார்ட்போனை (Jio Phone Next) உருவாக்க கூகுள் (Google) நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இணைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த தொலைபேசியை செப்டம்பர் 10ம்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சந்தையில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்,
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44-வது ஆண்டு பொதுக்குழு இன்று (ஜூன் 24) நடந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். மூன்று ஆண்டுகளில் ரூ.75,000 கோடி ரிலையன்ஸ் சார்பில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அறிவித்தார். மேலும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ போன் என்னும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை நிறுவனம் வெளியிட இருக்கும் அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் (Jiophone Next) ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளையும் பெறும். அதாவது, பயனர்கள் கூகிள் பிளேயிலிருந்து (Google Play) பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும். இருப்பினும், ஜியோபோன்-நெக்ஸ்ட் விலைகள் குறித்து நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அதன் விலை மிகக் குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இது குறித்து கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை புதிய ஸ்மார்ட்போன் குறித்து கூறுகையில், ‘கூகிள் மற்றும் ஜியோ இணைந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இது முதன்முறையாக இணையத்தை அனுபவிக்கும் கோடிக்கணக்கான புதிய பயனர்களுக்கு புதிய சாத்தியங்களைத் திறக்கும். கூகிள் கிளவுட் மற்றும் ஜியோ இடையே ஒரு புதிய 5G கூட்டாண்மை ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களை வேகமான இணையத்துடன் இணைக்க உதவும்.என்று குறிப்பிட்டார்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 10 கோடி வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் போனை பயன்படுத்திவருகின்றனர். சர்வதேச அளவில் குறைந்த விலையுள்ள 4ஜி ஸ்மார்ட்போனை இந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என ரிலையன்ஸ் கருதுகிறது.