ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் ரகுராம்ராஜன்!

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் ரகுராம்ராஜன்!

பாரத் ஜோடோ  என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்னும் நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.இன்றைய யாத்திரையின்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த செப்டம்பர் 7–ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று தற்போது ராஜஸ்தானை கடந்து வருகிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது.

இந்த யாத்திரையின்போது ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். ராகுல்காந்தியின் இந்த யாத்திரை பயணத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதி பகுதியில் இருந்து இன்று தனது 98வது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி துவக்கினார்.

இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்தார். முன்னாள் கவர்னராக ரகுராம் ராஜன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சித்திருந்தார். இந்திய பொருளாதாரம் குறித்தும் கடந்த காலங்களில் கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் 16–ந்தேதி 100-வது நாளை எட்ட உள்ளது. அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டுள்ளது. யாத்திரையின் 100 நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜெய்பூரில் பாடகி சுனிதி சவுகானின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!