ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் மும்மத பூஜையுடன் இணைப்பு!
சில மாதங்களும்மு முன் பெரும் சர்ச்சைக்குள்ளான பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்திய விமானப் படைக்கு வாங்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களும் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன இதையொட்டி அம்பாலா விமான நிலையத்தில் ரஃபேல் போர் விமானங்களுக்கு சர்வ தர்ம பூஜை நடைபெற்றது. இந்து மதப்படியும் கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களின் படியும் இஸ்லாமிய சம்பிரதாயப்படியும் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்ததும் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் பதினேழாவது படைப்பிரிவில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடி செலவில் 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க, 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், முதல் விமானம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் அரசு கடந்த ஆண்டு ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சின் போர்டியக்ஸ் நகரில் உள்ள மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி இந்தியா வந்தடைந்தன.
இந்த நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லி இந்திய விமானப் படைத் தலைவர் பதுரியா இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன அவை கோல்டன் ஆரோஸ் என்ற அம்பாலா விமான நிலைய விமான படை பிரிவில் சேர்க்கப் பட்டன.
#WATCH Rafale fighter aircraft flying at low-speed during an air display at Indian Air Force base in Ambala pic.twitter.com/8UhgbROzRN
— ANI (@ANI) September 10, 2020
ரஃபேலின் வருகை மூலம் இந்திய விமானப்படையின் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ரஃபேலை வைத்துள்ள 4வது நாடாக இந்தியா மாறி உள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து வாலாட்டிக் கொண்டிருப்பதால் விரைவில் ரஃபேல் விமானங்கள் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.