ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை: சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை: சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்த  நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இருப்பினும் நேற்று வாக்குகள் திட்டமிட்டபடி எண்ணப்பட்டன.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69,590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21-வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று  காலை 11.30 மணிக்கு ஐகோர்ட்டில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இந்த நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருப்பினும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் முடிவை வெளியிட மட்டும் தடை விதித்துள்ளது. இன்பதுரையின் மனு மீதான விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!