அரசியல் கட்சிகளை நம்பாதவர்கள் இந்தியர்கள்! – ஆய்வில் தகவல்!
நம் நாட்டில் மொத்தம் 2,293 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இங்குள்ள அரசியல் கட்சிகளை மக்கள் அதிகம் நம்புவதில்லை என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இன்னும் மூன்று வாரங்களில் இந்தியாவெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதையொட்டி இந்தியாவில் தற்போது 2293 கட்சிகள் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஜனவரி., பிபரவரி மாதத்தில் மட்டும் புதிதாக 149 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது! அத்துடன் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் தேசிய முற்போற்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர்த்து, ம.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சிகளாகத் தமிழகத்தில் 154 கட்சிகள் உள்ளன எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இச் சூழலில் அசிம் பிரம்ஜி பல்கலைக்கழகம் மற்றும் லோக்நிதி என்ற அமைப்பும் மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. இது அசாம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரகண்ட், திரிபுரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களிலுள்ள மக்களிடம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
மேலே குறிப்பிட்ட மாநிலங்களிலுள்ள பெரும்பாலான மக்கள் அரசியல் கட்சிகளை அதிகம் நம்புவதில்லை என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். மொத்தம் மைனஸ் 55 சதவீதம் மக்கள் அதிருப்தியை பதிய வைத்துள்ளனர். இந்திய ராணுவம்தான் மக்கள் அதிகம் நம்பும் அமைப்பாக உள்ளது. அதன்மீது மக்கள் 88% நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோல நீதிமன்றங்களின் மீது மக்கள் 60% நம்பிக்கை வைத்திருப்பது கருத்துகணிப்பில் தெரியவருகிறது.
மேலும் இந்தியா எதிர்கொண்டு வரும் மிகப் பெரிய பிரச்னை எது என்ற கேள்விக்கு 20% மக்கள் வேலையின்மையே என்று பதிலளித்துள்ளனர். அத்துடன் வளர்ச்சி மற்றும் வறுமை தான் முக்கிய பிரச்னை என்று 15% பேர் தெரிவித்துள்ளனர். நிர்வாகம் மற்றும் ஊழல் முக்கிய பிரச்னை என்று 13% பேர் பதில் கூறியுள்ளனர். மேலும் நாட்டிலுள்ள செல்வந்தர்களே இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ளனர் என்று இந்த ஆய்வில் மக்கள் தெரிவித்துள்ளனர்.