தனியார் கல்லூரிகள் ‘பல்கலை’ என்ற பெயரை பயன்படுத்த தடை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 17 பல்கலைகள் உள்ளன. நாடு முழுவதும் 126 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில், நிகர்நிலை பல்கலைக்குரிய தரம் இல்லை என்றும் அதெல்லாம் பல்கலை என்றால் உண்மையான பல்கலைக்கு வெறொரு பெயர் சூட்ட வேண்டும் என்றும் குரல் எழும்பிய நிலையில் நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது’ என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
அதாவது பல்வேறு தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், ’பல்கலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இதுகுறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன் விபரம் இதோ:
யு.ஜி.சி., விதிகளின் படி தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலை களாக பிரபலப்படுத்துகின்றன. இது விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக்கூடாது. தற்போது சொல்லி வரும் பல்கலை என்ற பெயரை உடனே நீக்க வேண்டும். இதுகுறித்து டிச., 3க்குள் செயல் படுத்திய அறிக்கையை யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநில உயர்கல்வித்துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை இதோ:
உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் யு.ஜி.சி., விதி களின்படி, எந்ததனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக்குறிக்குள் ’பல்கலைக்கு இணையாக கருதப்படும்’ என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம். அதன்பின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒருமித்த முடிவு எடுத்து ஒரு வார்த்தையை அறிவிக்கும். தற்போது பல்கலை என்ற வார்த்தையை நீக்கி அதற்கான ஆதாரத்துடன் வரும் 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.