March 26, 2023

சன்சத் ரத்னா -2023 : 13 எம்பிக்கள் & இரண்டு பார்லிமென்டரி குழுக்கள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் ஆகியோருக்கான விருதளிப்பு!

பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதளிப்புக்குழு ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 13 ஆண்டு காலமாக சன்சத் ரத்னா விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பை அனைத்துத் துறைகளிலும் வழங்கி, அதிக மதிப்பெண் புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அகில இந்திய அளவில் ’சன்சத் ரத்னா’ எனும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசனையின் பேரில் அவரைக் கொண்டே தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குரியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மிகச் சிறந்த பார்லிமென்ட்டேரியன்கள், பொது வாழ்வுப் பெரும் சான்றோர் ஆகியோரின் பங்களிப்புகளைக் கொண்ட நடுவர் குழு, விருதாளர்களைத் தெரிவு செய்து அறிவித்து இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நடுவர் குழுத் தலைவராகவும், இந்தியத் தேர்தல் ஆணையரகத்தின் தலைமை ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டி எஸ் கிருஷ்ணமூர்த்தி இணைத் தலைவராகவும் இயங்கி, இந்தப் பட்டியலை தயாரித்துள்ளனர்.

மக்களவையில் இருந்து எட்டு எம்பிக்களும், மாநிலங்களவையிலிருந்து ஐந்து எம்பிக்களும் விருதுகளுக்குரியோராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மிகச்சிறந்த நாடாளுமன்ற வாதியாகவும், பொது வாழ்வுப் பெருமகனாகவும், நீண்ட நெடும் ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி வரும் பிரமுகருக்கு ஏபிஜே அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவை நிதித் துறை நிலைக் குழு மற்றும் மாநிலங்களவை போக்குவரத்து, சுற்றுலா& பண்பாட்டு நிலைக் குழு ஆகியவையும் சன்சத் ரத்னா விருதுகளைப் பெறுகின்றன.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்ய சபா முன்னாள் எம்.பி யான டி கே ரங்கராஜனுக்கு வழங்கப்படுகிறது. சன்சத் ரத்னா விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 25ஆம் தேதி புதுடெல்லியில் நியூ மகாராஷ்டிரா சதன் மாளிகையில் நடைபெற உள்ளது.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆரம்பித்து வைத்த சன்சத் ரத்னா விருதளிப்புத் திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தொய்வில்லாமல் ஆண்டுதோறும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. சன்சத் ரத்னா விருதளிப்பு விழாக்களில் மேடையில் தோன்றி, இதுவரை 90 எம்பிக்கள் விருதுகள் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 100வது விருதைத் தாண்டும். இது ஒரு மைல்கல் நிகழ்வு.

விழா மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சன்சத் ரத்னா விருதளிப்புக் குழு மற்றும் பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவரான பிரைம் பாய்ண்ட் கே சீனிவாசன், சன்சத் ரத்னா விருதுக் குழுவின் தலைவர் பிரியதர்ஷினி ராகுல் ஆகியோரை முதன்மையாகக் கொண்டகொண்ட குழு கவனித்து வருகிறது. இந்த தகவல்களை பிரைம் பாயிண்ட் கே சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.