இந்தியாவுக்கு இனி முப்படைகளுக்கும் ஒரே தலைவர்! – பிரதமர் அறிவிப்பு!

இந்தியாவுக்கு இனி முப்படைகளுக்கும் ஒரே தலைவர்! – பிரதமர் அறிவிப்பு!

பாரத தேசம் முழுவதும் 73வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நேற்று இரவு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர், பிரதமர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி. அதில், “அனைவருக்கும் முதலில் ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடுமையான மழை பெய்து மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும். 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய சகோதரிகள் நன்மைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 21-ம் நூற்றாண்டில் இந்தியர்களின் கனவுகள் நனவாகி வருகின்றன.

இந்தியா தற்போது தண்ணீரின் தேவையை நன்கு உணர்ந்துள்ளது. இதையொட்டியே விவசாயி களின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப் பட்டுள்ளது. அதுபோலவே மருத்துவ துறை மக்கள் நலன் சார்ந்து பல மாற்றங்களை கண்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம்.

ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப் பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நமது படைகள் தான் நமது பெருமை. நமது முப்படைகளையும் மேலும் கூர்மையாக்க, இந்த செங்கோட்டையில் நான் மிக முக்கிய முடிவை அறிவிக்கிறேன். இந்தியாவுக்கு இனி முப் படைகளுக்கும் ஒரே தலைவர் (Chief of Defence Staff – CDS) தான். நமது படைகளை இந்த முறை மேலும் வலிமையாக்கப் போகிறது.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் இருந்து இந்தியாவை விடுவிப்போமா? புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் புதிய அறிமுகம் செய்யப்பட உள்ளது. “இந்தியாவில் தயாரிக்கப்படும்” பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர் உற்பத்தியையும், கிராமப்புற பொருளாதாரங்களையும் முன்னேற்ற முடியும்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்பு செய்யப்பட்டு இருந்த ஏற்பாட்டால் என்ன துயரம் எல்லாம் நடந்தது. ஊழல், வாரிசு அரசியல், சுயநலம், இதனால் மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பழங்குடி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. துய்மை பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் கனவுகள் கூட முடக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற நிலைமையை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

370-வது சட்டப்பிரிவை ஆதரிப்பவர்களிடம் நாடு கேட்பது இது தான், மக்கள் வாழ்க்கைக்கு 370-வது பிரிவு முக்கியம் என்றால் அது ஏன் முன்பாகவே நிரந்தர ஏற்பாடாக செய்யப்படவில்லை என்பது தான். மக்களின் ஆதரவுடன் 370-வது பிரிவு மாற்றப்பட்டுள்ளது. அரசியல் இன்று இருக்கும், நாளை போகும். ஆனால் நாட்டின் நலன் அப்படியல்ல, அது என்றும நிலையானது. ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற எண்ணம் இன்று நனவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி மூலம் இன்று ஒரே நாடு ஒரே வரி என்ற கனவும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுபோலவே ஒரே நாடு ஒரே மின்பகர்மானம் என்ற இலக்கும் சாத்தியமாகியுள்ளது.

Related Posts

error: Content is protected !!